Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முறைகேடு வழக்கில் ஐ பெரியசாமி விடுதலையை எதிர்த்து ஏன் அப்பீல் செய்யவில்லை - ஹைகோர்ட் அதிரடி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில் மேல் முறையீடு செய்யாதது ஏன் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பான கேள்வியை எழுப்பியது.

கடந்த 2008ல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக அப்போதைய வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி மீது 2012ல் அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

Housing Board land fraud case against I.Periyasamy High court hearing today

இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து, சென்னை எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2023 மார்ச்சில் உத்தரவிட்டது. இதை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை பிப்ரவரி 12ஆம் தேதியான நேற்று திங்கட்கிழமை தொடங்கியது. அப்போது, வழக்கில் சாட்சி விசாரணை துவங்கிய பின்பு விடுவிக்க கோரியது ஏன்? வழக்குப்பதியும் போது குற்றம் சாட்டப்பட்டவர் என்ன பொறுப்பில் இருந்தார்? என்பன உள்ளிட்ட ஐந்து கேள்விகளை எழுப்பிய நீதிபதி, இதுசம்பந்தமாக விளக்கம் அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

அதற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார், முதல் தகவல் அறிக்கையில் ஐ.பெரியசாமியின் பெயர் இல்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தபோதுதான் அவர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

ஐ.பெரியசாமிக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநரிடம் ஒப்புதல் பெறாமல் சபாநாயகரிடம் ஒப்புதல் பெறப்பட்டது சட்டப்படி தவறு என்பதால்தான் சாட்சி விசாரணை தொடங்கிய பின்னர் விடுவிக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. முறையான அனுமதியில்லாமல் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க முடியாது. அப்படி விசாரிப்பது நீதிமன்ற நேரத்தையும், பொதுமக்களின் பணத்தையும் வீணடிப்பதாகும் என்றும் தனது தரப்பு வாதங்களை முன் வைத்தார்.

சபாநாயகரின் ஒப்புதல் சட்டப்படி செல்லாது என்பதால் சிறப்பு நீதிமன்றம் மனதைச் செலுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளது. அது சரியானது என்று வாதிட்டார். அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பு வாதம் முடிந்ததையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பு வாதங்களுக்காக விசாரணையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்றைக்கு தள்ளிவைத்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜரானார். அரசிடம் ஊதியம் பெறுபவர் பொது ஊழியர் என்பதால் ஆளுநரிடம் தான், வழக்கு தொடர அனுமதி பெற வேண்டும். அமைச்சர்களை நியமிக்கவும், நீக்கவும் ஆளுநருக்கு தான் அதிகாரம் உள்ளது என்பதால் வழக்கு தொடர அவர் தான் அனுமதி வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுவுக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை, 2023 ஜனவரியில் தாக்கல் செய்த பதில் மனுவில், விடுவிக்க கோரிய மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் வழக்கு சாட்சி விசாரணை துவங்கிய பின் இடையில் விடுவிக்க கோர முடியாது என்ற நிலைபாட்டை தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

குற்றச்சாட்டு பதிவுக்கு பின் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணை நீதிமன்றம் விடுவிக்க முடியாது எனவும் தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முறையான அனுமதி பெறவில்லை என்றால், ஏன் முறையான அனுமதியை ஆளுநரிடம் பெறவில்லை என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கேள்வி எழுப்பினார்.

இன்னும் காலம் தாழ்ந்து விடவில்லை. இனிமேலும் சென்று ஆளுநர் அனுமதி பெறலாம் எனக் குறிப்பிட்ட நீதிபதி, விடுவிப்பை எதிர்த்து ஏன் மேல் முறையீடு செய்யவில்லை. லஞ்ச ஒழிப்புத் துறையின் செயல்பாடின்மை காரணமாகவே தாமாக முன் வந்து வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது என்றார்.

வழக்கில் இருந்து அமைச்சர் பெரியசாமியை விடுவித்த உடனேயே, லஞ்ச ஒழிப்புத் துறை, உரிய ஆவணங்களுடன் ஆளுநரை அணுகி வழக்கு தொடர அனுமதி பெற்றிருக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதி, சிறப்பு நீதிமன்றமும், ஆளுநரிடம் முறையாக அனுமதி பெறும்படி லஞ்ச ஒழிப்புத்துறை உத்தரவிடவில்லை எனத் தெரிவித்தார்.

வழக்கு நீண்ட தூரத்தை கடந்து விடவில்லை. ஒரே ஒரு சாட்சி மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளதால், ஆளுநரிடம் அனுமதி பெறலாம் எனக் குறிப்பிட்ட நீதிபதி, அமைச்சராக இருப்பவர் மக்கள் மத்தியில் சுத்தமானவராக இருக்க வேண்டும். அதிகாரத்தில் இருப்பவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனக் கூறிய நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+