2 கணக்குகளுடன் ரெடியாகி வரும் ஸ்டாலின்.. 'கல்யாணத்தில் போடப்பட்ட அச்சாரம்' இணையும் 3 கட்சிகள்! பரபர!
சென்னை : 2024 லோக்சபா தேர்தலுக்கு கூட்டணி தொடர்பாக 2 கணக்குகளோடு திமுக தயாராகி வருவதாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் ஒரு திருமண நிகழ்வில் கூட்டணி விரிவாக்கத்திற்கு அச்சாரம் போடப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
திமுக அதிக சீட்களில் போட்டியிட விரும்புவதால், ஏற்கனவே இருக்கும் கூட்டணி கட்சிகளுடனேயே தேர்தலைச் சந்திக்க இருப்பதாக கூறப்பட்டாலும், இன்னொரு கணக்கையும் திமுக தலைமை போட்டு வருகிறதாம்.
பாஜக, தமிழ்நாட்டில் வலுவான கூட்டணி அமைக்க முயற்சிப்பதைத் தடுக்கும் வகையில், பாமக, தேமுதிகவையும் அணியில் சேர்க்க திமுக பேசி வருவதாகக் கூறப்படுகிறது.
திமுக தலைமையில், காங்கிரஸ், பாமக, தேமுதிக, மதிமுக, விசிக, இடதுசாரிகள், மக்கள் நீதி மய்யம் மற்றும் பல சிறிய கட்சிகள் என பிரமாண்ட கூட்டணியை கட்டமைத்து பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்கவும் திமுக தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

பாஜக திட்டம்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் கணிசமான எம்.பிகளைப் பெற வேண்டும் என்ற திட்டத்துடன், தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளது பாஜக. தமிழக பாஜகவினர், வலுவான பூத் கமிட்டிகளை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி தலைமையில் இருந்து அவ்வப்போது தமிழக பாஜகவினருக்கு அதிரடி உத்தரவும் வந்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது. இதுபுறம் இருக்க, மெகா கூட்டணி அமைப்பதற்காக கூட்டணி கட்சிகளுடனுடம் பாஜகவின் முக்கிய தலைவர்கள் பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

பாஜக கூட்டணி
ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் இணைந்த அதிமுக, அமமுக, பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து திமுகவுக்கு எதிராக மெகா கூட்டணியை அமைக்க பாஜக முயன்று வருகிறது. இதில், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸை சேர்த்துக் கொள்ள மறுப்பதால், பாஜக தங்கள் சார்பாக ஓபிஎஸ் அணியில் இருந்து தாமரை சின்னத்தில் போட்டியிட வைக்கலாம் என்றும் பேச்சுகள் உலவி வருகின்றன. ஆனால், பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளின் முதல் ஆப்ஷன் திமுக கூட்டணி என்பதாகவே தெரிகிறது.

திமுக கூட்டணி
தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பல கட்சிகள் மாறுபட்ட கூட்டணி நிலைப்பாட்டை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதைப் பயன்படுத்தி, பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் ஆகிய மூன்று கட்சிகளையும் கூட்டணியில் சேர்த்து மெகா கூட்டணியை அமைக்க திமுக தயாராகி வருவதாகவும் தெரிகிறது. அதிமுகவில் நிலவி வரும் குழப்பம் காரணமாக, அக்கட்சியின் கூட்டணியில் இணைய தேமுதிக ஆர்வம் காட்டவில்லை என்பதாகத் தெரிகிறது.

கமல் + உதயநிதி
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பெரிதாக கட்சிப் பணிகளில் ஈடுபடவில்லை. மேலும், திமுகவுடன் கூடுதல் நெருக்கம் காட்டி வருகிறார். அதேபோல, பாஜகவை கடுமையாக விமர்சனமும் செய்து வருகிறார். உதயநிதி ஸ்டாலினுடன் நெருக்கமாகப் பழகி வரும் கமல்ஹாசன், அவர் மூலமே கூட்டணி பேச்சுகளை தொடங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், கமல் திமுக கூட்டணியில் இணைவது உறுதி என்கிறார்கள்.

பழைய கணக்கு
கடந்த 2019 தேர்தலில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜகவுக்கு கடுமையான எதிர்ப்பலை வீசியது. அப்போது 9 கட்சிகளின் கூட்டணியை அமைத்து 38 இடங்களில் வென்றது திமுக. இப்போது, பாஜக ஓரளவுக்கு வளர்ந்திருப்பதை திமுகவும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால், பழைய கணக்கையே இப்போதும் போட்டால் சிக்கல் ஏற்படலாம் என்று திமுக தலைமை நினைக்கிறதாம். இதனால் தான் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் துணை தேவை எனக் கருதுகிறதாம்.

காங்கிரஸுக்கு சிக்கல்
இதனால், காங்கிரஸ் கட்சிக்கு குறைவான சீட்களே ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 10 எம்.பி சீட்களை ஒதுக்கியது திமுக. அதில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் 9 தொகுதிகளை வென்றது காங்கிரஸ். இந்த முறை கூட்டணியை விரிவுபடுத்த ஸ்டாலின் விரும்புவதால், அதிகபட்சம் 5-6 தொகுதிகள் தான் காங்கிரஸுக்கு வழங்கப்படும் என்றும் பேசப்படுகிறது.

கல்யாணத்தில் அச்சாரம்
சமீபத்தில் நடந்த திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் இல்ல திருமண விழாவில், துரைமுருகன், உதயநிதி ஆகியோர் பங்கேற்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அண்புமணி ஆகியோரும் இந்த திருமணத்தில் பங்கேற்றனர். அப்போது, துரைமுருகன், உதயநிதி ஆகியோர், ராமதாஸ் மற்றும் அன்புமணியிடம் லோக்சபா தேர்தல் குறித்துப் பேசியதாகத் தெரிகிறது. இந்தக் கல்யாணத்திலேயே பாமக கூட்டணிக்கு அச்சாரம் போடப்பட்டுவிட்டது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

கணக்கு 1
முன்பு, திமுக அதிக சீட்களில் போட்டியிட விரும்புவதாக கூறப்பட்டது. அதனால், ஏற்கனவே இருக்கும் கூட்டணியே போதும் என்ற கணக்கில் இருந்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி, அடிமட்ட அளவில் மேற்கொண்டு வரும் பணிகள் பற்றிய உளவுத்துறை ரிப்போர்ட்டால், முதல்வர் ஸ்டாலின் மனதை மாற்றிக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கூட்டணி கணக்குகளை மாற்றாவிட்டால் நிலைமை விபரீதமாகலாம் என்ற முடிவுக்கு ஸ்டாலின் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கணக்கு 2
பாஜகவின் தீவிரம் தமிழ்நாட்டையும் துடைத்துக் கொண்டு சென்றுவிடக்கூடாது, மீண்டும் பாஜக மத்தியில் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் பட்சத்தில், தமிழ்நாட்டில் திமுக அதிக எம்.பிக்களோடு இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கருதுகிறாராம். இதன் காரணமாக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் சேருவது உறுதி என்றும், அதன் காரணமாக கட்சிகளுக்கு சீட் எண்ணிக்கை குறையும் என்றும் கூறப்படுகிறது.

விரிவு செய்யும் ஸ்டாலின்
பாஜக பிசாசு மாதிரி உருவெடுத்து வருகிறது, பணம், அதிகாரம் என சம பலத்துடன் பாஜக மோத வருகிறது, யாருடன் கூட்டணி என்பதையெல்லாம் ஸ்டாலின் பார்த்துக்கொள்வார் என மூத்த அமைச்சர் துரைமுருகன் சமீபத்தில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசியிருப்பதும் முக்கியமானது. இதன் மூலம், பாஜகவை வலுவாக எதிர்க்க, திமுக, கூட்டணியை விரிவாக்கத் திட்டமிட்டு வருவது தெளிவாகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications