சென்னை காவேரி மருத்துவமனையில் பி.சுசீலா! எப்படி இருக்கிறார்? எப்போது வீடு திரும்புகிறார்?
சென்னை: 88 வயதாகும் பழம்பெரும் பாடகி பி. சுசீலா, சிறுநீரக கோளாறு, வயோதிகம் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் எப்படி இருக்கிறார் என்பது குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம் உள்பட 9 மொழிகளில் பாடல்களை பாடியவர் சுசீலா. இவர் இதுவரை 20 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். அவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

தென்னிந்தியாவின் இசைக் குயில், மெல்லிசை அரசி என பட்டப் பெயர்களை கொண்டு அழைக்கப்படுகிறார். இவர் இந்தியாவிலேயே அதிக பாடல்களை பாடியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் உலக சாதனைக்கான கின்னஸ் புத்தகம் மற்றும் ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்டவற்றில் பி.சுசீலாவின் பெயர் இடம் பெற்றுள்ளது.
5 முறை சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை பி.சுசீலா பெற்றுள்ளார். சினிமாவுக்கு தொண்டாற்றியதாக அவருக்கு பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டுள்ளது. அது போல் தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது. 88 வயதாகும் இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
சென்னை ஆழ்வார்பேட்டை ஆனந்தா சாலையில் உள்ள இல்லத்தில் பி.சுசீலா தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பி.சுசீலாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டதாகவும் அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு வயோதக பிரச்சனைகளுடன் சிறுநீரக கோளாறும் இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் சுசீலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். சிகிச்சை முடிந்து நாளை மறுநாள் அதாவது செவ்வாய்க்கிழமை அவர் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது.
இதனிடையே பி.சுசீலா உடல்நலக் குறைவு குறித்து அறிந்த ரசிகர்கள் அவர் உடனடியாக நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பி.சுசீலா முடி காணிக்கை செலுத்தினார். அப்போது நாராயண மந்திரம் என்ற பக்தி பாடல் பாடி திருப்பதி ஏழுமலையானை வணங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. இவர் முடி காணிக்கை செய்த புகைப்படங்களும் இணையதளத்தில் பரவின.












Click it and Unblock the Notifications