வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு.. மாண்டஸ் புயலால் சென்னையில் என்ன நடக்கும்? வெதர்மேன் முக்கிய வார்னிங்
சென்னை: மாண்டஸ் புயலால் சென்னையில் என்ன நடக்கும்? காற்று வீசும் வேகம் எவ்வளவு இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று உள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த புயல் தமிழ்நாட்டை நோக்கி வந்துகொண்டு இருக்கிறது. இந்த புயல் தற்போது அதிதீவிர புயலாக உருவெடுத்து இருக்கிறது.
வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது.
துறைமுகங்களில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.. உஷார்! எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட் தெரியுமா?
எங்கே கரையை கடக்கும்?
புயல் கரையை கடக்கும் போது அதி தீவிர புயலாக இல்லாமல் வலிமை குறைந்த புயலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னைக்கு தென்கிழக்கில் 320 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. இது நேற்று மிகவும் மெதுவாக நகர்ந்தது. ஆனால் இன்று புயலின் நகரும் வேகம் அதிகரித்து உள்ளது, மாண்டஸ் புயல் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. உங்கள் பைக்கை 12 கிமீ வேகத்தில் ஓட்டினால் எப்படி இருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள். அந்த வேகத்தில்தான் புயல் நகருகிறது.
புயல்
நேரம் செல்ல செல்ல புயல் இன்னும் வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது 85 கி.மீ. வேகத்தில் மிக பலத்த காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. ஆனாலும் புயல் கரையை கடக்கும் இடம் கடைசி நேரத்தில் மாற வாய்ப்புகள் உள்ளன, இந்த புயல் காரணமாக இன்று தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் மிகவும் பலத்த மழை பெய்யலாம் என வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
சென்னை வானிலை
மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுச்சேரியில் இன்று பலத்த மழை கொட்டி தீர்க்கலாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டை தாக்க உள்ள புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு வெளியிட்டு உள்ளார். அதில், இது வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு அப்டேட். வடக்கு தமிழ்நாட்டில் மழை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க போகிறது.
கணிப்பு
டெல்டாவில் இருந்து சென்னை வரை நேற்று இரவில் இருந்து மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை காலை வரை மிக அதிக மழையில் இருந்து மிக தீவிர மழை வரை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன . சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரத்தில் மிக தீவிர கனமழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் மிக தீவிர கனமழை பெய்யும். செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்யும். சென்னைக்கு அருகில்தான் புயல் கரையை கடக்க உள்ளது. மகாபலிபுரத்திற்கு அருகில் கரையை கடக்கலாம். இல்லையென்றால் தென் சென்னை பகுதியில் இருந்து 50 கிமீ மேலே, கீழே எங்காவது புயல் கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன. வெள்ளிக்கிழமை இரவில் இருந்து சனிக்கிழமை காலை வரை இதனால் காற்று பலமாக வீசும்.
தமிழ்நாடு வெதர்மேன்
புயல் கரையை கடக்கும் போது காற்று 70 to 80 km/hr என்ற வேகத்தில் இருக்கும். அதேபோல் காற்றுவீச்சு 110 km/hr என்ற வேகத்தில் இருக்கும். சென்னையில் காற்றுவீச்சு வேகம் 100 km/hr ஐ கடந்தது இதற்கு முன் 3 வருடங்களில்தான். 1966, 1994 மற்றும் 2016 வருடங்களில்தான் சென்னையில் இவ்வளவு வேகமாக காற்று வீசி இருக்கிறது. அதனால் இந்த முறையும் கவனமாக இருக்க வேண்டும். கடல் இதன் காரணமாக ஆக்ரோஷமாக இருக்க போகிறது. இதனால் யாரும் கடலுக்கு இன்றில் இருந்து சனிக்கிழமை பிற்பகல் வரை செல்ல வேண்டாம், என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.