தமிழ்நாட்டில் மாவட்டம்தோறும் மதக்கலவரத் தடுப்புப்பிரிவு ஏன்? அதன் பணி என்ன? எப்படி செயல்படும்?
சென்னை: மதக்கலவரங்களை தடுக்க மாவட்டம் தோறும் குழுக்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தெரிவித்த நிலையில் அதன் செயல்பாடு மற்றும் கட்டமைப்பு எப்படி இருக்கும் என்பதை காண்போம்.
குஜராத், முசாபர்நகர், டெல்லி தொடங்கி அண்மையில் கர்நாடகா வரை மதக் கலவரங்கள் நடந்துள்ளன. தமிழ்நாட்டிலும் கோவை, மண்டைக்காடு போன்ற பகுதிகளில் கலவரங்கள் நடந்துள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட விநாயகர் ஊர்வலம், ரத யாத்திரை, இந்து முன்னணி நிர்வாகியின் இறுதி ஊர்வலம் செல்லும்போது கலவரங்கள் வெடித்தன.

மதக் கலவரங்களை தூண்டும் ஆசாமிகள்
நாடு முழுவதும் பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வரும் சூழலில் குற்றவாளியும், பாதிக்கப்பட்டவரும் வெவ்வேறு மதத்தவறாக இருந்தாலே அதை வைத்து மதக்கலவரங்களை தூண்டும் போக்கு தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் தொடர்கிறது. அண்மையில்கூட அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை, மேலூர் பெண் மரணம் தொடர்பான வழக்குகளை மதக் கலவரமாக மாற்றும் போக்கும் அதிகரித்து வருகிறது.

சமூக வலைதளங்களில் வெறுப்பு பிரச்சாரம்
சமூக வலைதளங்களின் வளர்ச்சிக்கு பிறகு சாதி, மத வெறுப்பு பிரச்சாரத்தை பிரிவினை சக்திகள் கட்டவிழ்த்துவிட்டு கலவரத்தை தூண்டி அரசியல் ஆதாரம் தேட முயல்கின்றனர். மதத்தை வைத்து அரசியல் செய்யும் கட்சிகளில் உயர் பொறுப்புகள் கிடைக்க இத்தகைய செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.

சாட்டையை சுழற்றும் தமிழ்நாடு அரசு
இத்தகையவர்களை ஒடுக்கவே தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்டம்தோறும் மதக்கலவர தடுப்பு சிறப்புப் பிரிவை அமைக்க இருப்பதாக தெரிவித்து உள்ளார். 1997 கோவை கலவரம், 1998 குண்டுவெடிப்பை தொடர்ந்து கோவையில் அமைக்கப்பட்ட மதக்கலவரத் தடுப்பு சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்ட நிலையில் அது தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுகிறது.

மதக்கலவரத் தடுப்புப்பிரிவின் கட்டமைப்பு
இந்த பிரிவில் ஒரு காவல் ஆணையர், உதவி ஆணையர், 2 ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர்கள், 5 அலுவலக பணியாளர்கள், சுமார் 15 களப்பணியாளர்கள் என 25 - 27 பேர் வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் பணியில் இருப்பார்கள். களத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர்கள் பணிபுரிவார்கள்.

சிறப்புப்பிரிவின் பணி
சீருடை இன்றி சாதாரண மக்களைபோல் கண்காணித்து புலனாய்வில் கிடைக்கும் தகவல்களை காவல் ஆணையருக்கு இவர்கள் தெரியப்படுத்துவார்கள். இவர்கள் நேரடியாக சட்டம் ஒழுங்கு பராமரிப்பு பணியில் ஈடுபடமாட்டார்கள். ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதுபோல் தெரியவந்தால் முன்கூட்டியே அதுகுறித்து இவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். சமூக வலைதளங்களையும் இவர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications