300 ஆண்டு பழமையான தமிழ் பைபிள் லண்டன் சென்றது எப்படி? திருடியது யார்?... நடந்தது என்ன?
சென்னை: தஞ்சை சரஸ்வதி மஹாலில் வைக்கப்பட்ட 300 ஆண்டு பழமையான முதல் தமிழ் பைபிள் 2005ல் மாயமான நிலையில் லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 17 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான பைபிள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது எப்படி என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் முதலில் ஆங்கில மொழியில் மட்டுமே இருந்தது. இதனால் ஆங்கிலம் பேசாத பிற நாட்டு மக்கள் அதனை வாசிப்பதில் சிரமத்தை சந்தித்தனர்.
இந்நிலையில் இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தை பரப்பும் வகையில் டென்மார்க் மன்னரின் வேண்டுகோளை ஏற்று ஜெர்மன் நாட்டை சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் பார்தோலோமாஸ் செய்ங்கெங்பால்க் தமிழகம் வந்தார்.\

தமிழில் முதல் பைபிள்
இவர் தமிழகத்தின் ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடிக்கு 1706ம் ஆண்டு வந்தார். பிறகு தமிழ் கற்க துவங்கினார். தமிழ் கற்று கொண்ட மதபோதகர் அச்சகம் நிறுவி இந்திய கலாசாரம் மதம் தொடர்பான புத்தகங்களை தமிழ் மொழியில் அச்சிட துவங்கினார். 1714ல் புதிய ஏற்பாடு பைபிளை தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்து 1715ல் அச்சடித்தார்.

லண்டனில் கண்டுபிடிப்பு
இந்த பைபிள் சரஸ்வதி மஹால் நூலகத்தில் வைக்கப்பட்டு இருந்த நிலையில் 2015ல் மாயமானது. இந்நிலையில் தற்போது இந்த பைபிள் லண்டனில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி பைபிளை லண்டனில் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் தான் இந்த விசாரணையின் பின்ணனி தகவல் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

திருடப்பட்ட பைபிள்
தரங்கம்பாடியில் தமிழில் அச்சடிக்கப்பட்ட பைபிளானது அப்போதைய தஞ்சாவூர் சரபோஜி மன்னருக்கு பரிசாக வழங்கப்பட்டது. இந்த பைபிள் சரஸ்வதி மஹால் நூலகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் இந்த தமிழ் பைபிள் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் இருந்து 2005ல் மாயமானது. யாரோ பைபிளை திருடி சென்றது தெரியவந்தது.

முடித்து வைத்த வழக்கில் மீண்டும் விசாரணை
இதுபற்றி நூலக நிர்வாகம் சார்பில் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் பைபிள் பற்றிய விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் கண்டுபிடிக்க முடியாத வழக்காக முடித்து வைக்கப்பட்டது. இதற்கிடையே தான் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் 2017 ல் மீண்டும் புகார் செய்யப்பட்டது. இதுபற்றி போலீசார் விசாரணையை துவக்கினர்.

விசாரணை நடந்தது எப்படி?
தனிப்படை போலீசார் 2005ம் ஆண்டுக்கான பதிவேடுகளை ஆய்வு செய்தனர். அப்போது 2005 அக்டோபர் மாதம் சரபோஜி நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சிக்காக நூலகத்துக்கு வெளிநாட்டினர் சிலர் வந்து சென்றது தெரியவந்தது. இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் வெளிநாட்டு அருங்காட்சியகம், நூலகங்களின் வலைதளங்கள் மூலமும் விசாரணை நடத்தப்பட்டது.

யுனெஸ்கோ ஒப்பந்தப்படி
இந்த விசாரணையின்போது மாயமான தமிழ் பைபிள், சரபோஜி மன்னரின் கையெழுத்துடன் லண்டனில் கிங்ஸ் கலெக்சன் நிறுவனத்தில் இருப்பது தெரியவந்தது. அதோடு சரஸ்வதி மஹாலில் இருந்து திருடப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த பைபிளை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தீவிர விசாரணை
அதேநேரத்தில் தமிழில் முதல் மொழிப்பெயர்ப்பு பைபிளை திருடியது யார்? எப்படி லண்டன் சென்றது? என்பது பற்றிய விசாரணையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2005ல் மாயமான பைபிளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் வழக்கை முடித்து வைத்த நிலையில் தற்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications