மகளிர் உரிமைத் தொகை வேணுமா? இனி சட்டுனு வாங்கலாம் புதிய ரேசன் கார்டு! தமிழக அரசின் ஸ்மார்ட் மூவ்!
சென்னை: தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு எனப்படும் குடும்ப அட்டைக்கான விண்ணப்ப முறை கடந்த சில ஆண்டுகளில் பெரிய அளவில் எளிமையாக்கப்பட்டுள்ளது. முன்பு அலுவலகங்களுக்கு அடிக்கடி சென்று வரவேண்டிய நிலை இருந்தது. இப்போது அந்த நிலை மாறி, வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு நேரம், செலவு, அலுவலக அலைச்சல் ஆகியவை பெருமளவு குறைந்துள்ளன. புதிய ரேசன்கார்டு பெற்றதும் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
புதிய ரேஷன் கார்டு பெற விரும்புபவர்கள் முதலில் தேவையான ஆவணங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். குடும்பத் தலைவரின் சமீபத்திய புகைப்படம் அவசியம். இந்தப் புகைப்படம் குறிப்பிட்ட அளவுக்குள் இருக்க வேண்டும். அதேபோல், விண்ணப்பதாரரின் முகவரியை உறுதி செய்யும் ஆவணமும் தேவைப்படுகிறது.
ஆதார் அட்டை, மின்சார கட்டண ரசீது, வீட்டு வரி ரசீது அல்லது எரிவாயு இணைப்பு ரசீது போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை முகவரி சான்றாக பயன்படுத்தலாம். குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விவரங்களும் இணைக்கப்பட வேண்டும். வீட்டில் கேஸ் இணைப்பு இருந்தால், அதன் நுகர்வோர் எண் மற்றும் நிறுவனம் குறித்த தகவல்களும் வழங்க வேண்டும்.

தமிழ்நாடு ரேஷன் கார்டு
இந்த ஆவணங்களை தயார் செய்த பிறகு, தமிழ்நாடு பொது விநியோக அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpds.gov.in என்ற தளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு புதிய மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. அந்தப் பக்கத்தில் தேவையான தனிப்பட்ட விவரங்கள், முகவரி, குடும்ப உறுப்பினர்களின் தகவல்கள் உள்ளிட்டவை கவனமாக நிரப்பப்பட வேண்டும். அனைத்து விவரங்களும் சரியாக பதிவுசெய்யப்பட்ட பிறகு விண்ணப்பத்தை ஆன்லைனிலேயே சமர்ப்பிக்கலாம்.
புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம்
விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதும், சம்பந்தப்பட்ட பகுதி வட்ட வழங்கல் அலுவலர் அல்லது வருவாய் ஆய்வாளர் விண்ணப்பதாரரின் வீட்டிற்கு வந்து நேரடி ஆய்வு மேற்கொள்வார். குடும்ப விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தகவல்கள் உண்மையா என்பதை உறுதி செய்வதே இந்த ஆய்வின் நோக்கம். ஆய்வு முடிந்து விண்ணப்பம் ஏற்கப்பட்டால், அதற்கான தகவல் விண்ணப்பதாரரின் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
மின்னணு ரேஷன் கார்ட்
அதன்பிறகு, மின்னணு ரேஷன் கார்டை இணையதளம் மூலமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சில பகுதிகளில் நியாய விலை கடைகள் மூலமாகவும் இந்த அட்டையைப் பெறும் வசதி உள்ளது. இதன் மூலம் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை பெற முடியும். புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க சில தகுதிகளும் உள்ளன. விண்ணப்பதாரர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். ஏற்கனவே வேறு ஒரு ரேஷன் கார்டில் பெயர் இருந்தால், அதை முதலில் நீக்கம் செய்திருக்க வேண்டும். பெயர் நீக்கப்பட்டதற்கான சான்று இருந்தால், அதை விண்ணப்பத்தின் போது இணைக்க வேண்டும்.
ரேஷன் கார்டில் பெயர் நீக்கம்
ஒரு ரேஷன் கார்டிலிருந்து உறுப்பினரின் பெயரை நீக்கும் வசதியும் தற்போது ஆன்லைனிலேயே செய்ய முடிகிறது. இதற்காக அந்த ரேஷன் கார்டு எண்ணும், அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணும் அவசியம். திருமணம், இடமாற்றம், மரணம் போன்ற காரணங்களுக்காக பெயர் நீக்க வேண்டிய சூழலில், அதற்கான ஆதார ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றலாம். தேவையான தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு பெயர் நீக்கம் செய்யப்படும். இந்த ஆன்லைன் முறைமையால், ரேஷன் கார்டு தொடர்பான பணிகள் பொதுமக்களுக்கு மிக எளிதாகவும் விரைவாகவும் மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications