வீடு, நிலம் வாங்கும் போது மறந்து செய்யக்கூடாத தவறுகள்.. எளிதாக ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?
சென்னை: வீடு அல்லது நிலம் வாங்குகிறீர்கள் என்றால் அதற்கு பத்திரம் பதிந்த பின், உடனே பட்டாவும் சேர்த்து வாங்கிவிடுங்கள். ஒருவேளை நீங்கள் வாங்கியது குடும்ப பாகப்பிரிவினை மூலம் வந்த வீடு அல்லது நிலம் என்றால் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அந்த சொத்து அவரது பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளதா..? என்பதை அவசியம் கவனிக்க வேண்டும். அதன் அடிப்படையில் புதியதாக சம்பந்தப்பட்ட சொத்தை வாங்குபவர் அவரது பெயருக்கு பெயர் மாற்றம் செய்வது எளிதாக இருக்கும் என்கிறார்கள் ரியல் எஸ்டேட் சட்ட ஆலோசகர்கள்.
தற்போதைய நிலையில் பலர் வீடு வாங்க வேண்டும், நிலம் வாங்க வேண்டும் என்று ஆர்வமாக உள்ளார்கள். வீடு, நிலம் வாங்க பத்திரம் பதிந்த பின் பட்டா வாங்கும் போது பல்வேறுவிதமான சிக்கல்களை சந்திக்கிறார்கள். இதற்கு காரணங்களும் இருக்கின்றன.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின்... திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த துர்கா - வெற்றிக்கு வழிபாடு
பழைய பட்டா காரணமாகவே பலர் சிக்கலை சந்திக்கிறாரக்ள் பல்வேறு காரணங்களால் குடும்ப ரீதியாக பாகப்பிரிவினை செய்யப்பட்ட சொத்துக்கு முறையான உட்பிரிவு பட்டா வாங்காமல் இருக்கும். அப்படியான சூழலில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உரிமை கொண்டாடும் நிலையில்தான் பழைய பட்டா இருக்கும். அதுபோன்ற சமயங்களில் பாகப்பிரிவினை அடிப்படையில் பெறப்பட்ட பட்டா இல்லாத வீடு, மனை உள்ளிட்ட சொத்துக்களை வாங்குவது பல சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.
சிக்கல் வரும்
அவ்வாறு குறிப்பிட்ட வீடு அல்லது மனை வாங்கப்பட்டிருந்தாலும், பட்டா விஷயத்தில் எவ்விதமான கால தாமதமும் கூடாது. காரணம், சொத்தை விற்பனை செய்தவர் ஒருவேளை இறந்துவிடும் பட்சத்தில் அவர் பெயரில் உள்ள பழைய பட்டாவை புதியதாக வாங்கியவர் பெயருக்கு மாற்றுவது சிரமமானதாகி விடும். அதன் பிறகு, இறந்தவரது வாரிசுகள் இருப்பின் அவர்களது உதவி தேவைப்படும் நிலையில், பெயர் மாற்றம் செய்வது சிக்கலான விஷயமாகி விடும். ஆகவே பாகப்பரிவினை மூலம் கிடைத்த ஒரு சொத்துக்கு உரிய உட்பிரிவு பட்டா இருக்கும் நிலையில், அந்த சொத்தை வாங்கும் முடிவை எடுக்கலாம். அப்போது தான் சொத்தை கிரயப்பத்திரம் செய்த பிறகு, பட்டாவை புதியதாக வாங்கியவர் பெயருக்கு மாற்றம் செய்வது சுலபமாகி விடும்.
பட்டா அவசியம் ஏன்
இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நிலம் அல்லது வீடு வாங்குபவர்கள் கட்டாயம் செய்ய வேண்டும். நீங்கள் வாங்கும் இடத்திற்கு உடனே ஆன்லைன் பட்டா வாங்கிவிடுங்கள். ஏனெனில் சிலர் தவறுதலாகவோ; அல்லது வேண்டுமென்றோ அடுத்தவர் நிலங்களையும் பட்டா போடுவது, பத்திரம் போடுவது நடந்து நடக்கிறது. எனவே உங்கள் நிலம் தொடர்பான வருவாய் ஆவணங்களை அவ்வப்போது சரிபார்த்து வைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் டவுன்லோடு செய்தும் வைத்துக் கொள்வது நல்லது.
பட்டா தருவது எப்படி
தற்போதுள்ள நிலையில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் இருந்து நிலம் கிரையம் பெற்ற விவரங்கள் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில் நிலம் கிரையம் பெற்றவர்கள், பட்டா மாறுதலுக்கு உடனடியாக உரிய ஆவணங்களுடன் கிராம நிர்வாக அதிகாரிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கின்றனர். அதன்பிறகு சர்வேயர் வந்த அளந்து பார்த்த பின்னர் பட்டா, தாலுகா அலுவலகத்தில் இருந்து வழங்குகிறார்கள்.
ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி
பட்டா பெறுவதற்கு தனியாக 3 பக்க விண்ணப்பப்படிவம் உள்ளது. (இணையத்தில் பதிவிறக்கம் செய்ய www.tn.gov.in/LA/forms) அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் விண்ணப்பிக்க வேண்டும். இதை ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த விண்ணப்பம் www.tn.gov.in/LA/forms என்ற இணையதளத்தில் கிடைக்கிறது.
இந்த விண்ணப்பத்தை இணையத்தில் இருந்து டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும். பிறகு பூர்த்திசெய்து சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் விண்ணபிக்க வேண்டும். ஒரு சர்வே நம்பர் முழுவதும் வாங்கியிருந்து அதற்கு பட்டா மாற்றம் 15 நாட்களிலும் ஒரு சர்வே எண்ணில் ஒரு பகுதி, பட்டா மாற்றம் (உட்பிரிவு) 30 நாட்களிலும் பட்டா மாற்றம் தாலுகா அலுவலகத்தில் இருந்து நமக்கு செய்து கொடுக்கப்படவேண்டும். இதற்கான கட்டணமாக ரூ.80. தாலுகா அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.
எப்படி பெறுவது
விண்ணப்பிக்க தேவைப்பாடு ஆவணங்கள்
விண்ணப்பத்தின் விவரங்கள்
விண்ணப்பதாரர் பெயர்,
தகப்பனார்/கணவர் பெயர்,
இருப்பிட முகவரி,
பதிவு மாற்றம் கோரும் சொத்து பற்றிய விவரம். அதாவது
மாவட்டம்,
வட்டம்,
கிராமத்தின் பெயர்,
பகுதி எண்,
நகர அளவை எண்/மறுநில அளவை எண்,
உள்ளூர் பகுதி/நகரத்தின் பெயர்,
தெருவின் பெயர்,
மனைபிரிவு மனை எண்,
போன்ற விவரங்கள் கொடுக்கப்படவேண்டும்.
மனை அங்கீகரிக்கப்பட்டதா,
அங்கீகாரம் இல்லாத மனையா,
என்பது பற்றித் தெரிவதற்காக மனைப்பிரிவு வரைபடத்தை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
பிறகு சொத்து எந்த வகையில் விண்ணபதாரருக்குக் கிடைக்கப்பட்டது என்பதையும் தெரிவிக்க வேண்டும்..
ஆவணங்கள்
சம்பந்தப்பட்ட சொத்தை விண்ணப்பதாரர் அனுபவித்து வருவதற்கான சான்றுகளையும் இணைக்க வேண்டும்.
அதாவது சொத்து வரி ரசீது,
மின் கட்டண அட்டை,
குடிநீர் வடிகால் இணைப்பு அட்டை,
குடும்ப அட்டை,
வாக்காளர் அட்டை
பதிவு மாற்றம் கோரும், இடம் சொத்தின் ஒரு பகுதியாக இருப்பின் உட்பிரிவிற்கு கட்டணம் செலுத்திய விவரம். (சலான் எண்/நாள்/தொகை/செலுத்திய வங்கி/கருவூலத்தின் பெயர்) போன்ற விவரங்களை விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும்.
ஆன்லைனில் பட்டா சிட்டா
ஆன்லைனில் பட்டா சிட்டா பெற என்ன செய்ய வேண்டும்?
ஆன்லைனில் பட்டா- சிட்டா பெற முதலில் இதற்காக தமிழக அரசு மின்னணு சேவைக்கான இணையதளத்தை eservices.tn.gov.in என்ற முகவரியில் திறக்க வேண்டும். அதில் ஒரு அட்டவணை கிடைக்கும். உங்கள் மாவட்டத்தின் பெயரையும், உங்கள் நிலம் இருக்கும் பகுதி நகரமா, கிராமமா? என்பதையும் அதில் குறிப்பிட்டு, 'சப்மிட்' பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். அப்போது தரப்படும் அட்டவணையில் உங்கள் நிலம் அமைந்திருக்கும் தாலுகா, வருவாய் கிராமம் ஆகியவற்றை 'க்ளிக்' செய்து தேர்வு செய்யுங்கள். பின்னர் பட்டா எண் அல்லது சர்வே எண்ணை பதிவு செய்யுங்கள். அட்டவணையில் கொடுக்கப்பட்டிருக்கும் அங்கீகார எண்ணையும் பதிவு செய்து, 'சப்மிட்' கொடுக்கவும்.
பட்டா வராவிட்டால்
நீங்கள் சர்வே எண்ணை பதிவு செய்திருந்தால், அதன் உட்பிரிவை அடுத்து கிடைக்கும் அட்டவணையில் தேர்வு செய்ய வேண்டும். பிறகு நீங்கள் பட்டா/ சிட்டா பார்க்க வேண்டுமா? அல்லது புல வரைபடம் பார்க்க வேண்டுமா? என்பதை முடிவு செய்து தேவையானதை க்ளிக் செய்யுங்கள். பட்டாவை கிளிக் செய்திருந்தால், இப்போது உங்கள் பட்டா நகல் காண்பிக்கப்படும். புல வரைபடம் கேட்டிருந்தால், அதன் நகல் தெரியும். உங்கள் தேவைக்கு இதை டவுன்லோடு செய்து பயன்படுத்துங்கள். ஒருவேளை பட்டா எண் தெரியவில்லை என்றால் சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். சர்வே எண் (ஏதாவது ஒரு சர்வே எண் போதுமானது) உடன் உட்பிரிவுகளும் நிரப்பப்பட வேண்டும். உங்கள் விண்ணப்பத்தை தாலுகா அலுவலகத்தில் கொடுத்து ஒப்புதல் ரசீது வாங்கிக்கொள்ள வேண்டும். குறித்த காலத்துக்குள் பட்டா வழங்கப்படவில்லை என்றால் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கலாம்.