தேனி கிளம்பும் ஓபிஎஸ்! பாய்வதற்காக பதுங்க முடிவு? 200 கார்கள்,வழிநெடுக ஒரு லட்சம் பேர்! மாஸ் ப்ளான்!
சென்னை : பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே மதுரையில் இருந்து தேனிக்கு செல்லும் ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்பதற்காக 200 கார்களில் ஊர்வலம், வழிநொடுகிலும் பல இடங்களில் சுமார் ஒரு லட்சம் பேரை வைத்து வரவேற்பளிக்க பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது எடப்பாடி தரப்பினரையே சற்றே அச்சத்தில் தான் ஆழ்த்தியுள்ளது.
Recommended Video
சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை அவமதிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 லோக்சபா, 7 சட்டசபை இடைத்தேர்தல்- பாஜக அமோக முன்னிலை-பஞ்சாப்பில் ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சி!
மேலும் நீதிமன்ற உத்தரவை மீறி ஒற்றைத் தலைமை விவகாரத்தை முன்னிறுத்தி கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியதை கண்டித்தும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிசாமியின் உருவப் பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனியில் போராட்டம்
குறிப்பாக ஓபிஎஸ்ஸின் சொந்த மாவட்டமான தேனியில் நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே கூடிய அதிமுகவினர், எடப்பாடி கே. பழனிசாமியின் உருவப் பொம்மையை எரிக்க முயன்றனர். அவர்களை, போலீஸார் தடுத்து உருவப் பொம்மையை பறிமுதல் செய்தனர். இதேபோன்று, பெரியகுளத்தில் தேனி எம்பி அலுலவலகம் முன்பாக எடப்பாடி பழனிசாமியை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பழனிசாமியின் படங்களை அகற்றுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
உற்சாகத்தில் ஓபிஎஸ்
இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்திற்கு பின் அன்று மாலையே டெல்லி புறப்பட்டுச் சென்ற ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முயன்றார். ஆனால் அவர் நேரம் ஒதுக்காததையடுத்து சில முக்கிய தலைவர்களை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் ஆதரவாக பாஜக இருக்கும் என அவர்கள் உறுதி அளித்ததாக கூறப்படும் நிலையில் உற்சாகத்துடன் சென்னை திரும்பியுள்ளார் ஓபிஎஸ். இந்நிலையில் சுமார் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு தனது சொந்த ஊரான தேனி செல்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.
தேனிக்கு பயணம்
ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு மீண்டும் நடத்தப்படும் என எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தெரிவித்திருக்கும் நிலையில் அதற்கான ஆலோசனை பணிகளில் ஈடுபட வேண்டும் என அவர்கள் முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் இருந்தால் வேறு சில ஆதரவாளர்கள் தன்னை சந்திக்க வரமாட்டார்கள் என நினைத்திருக்கும் ஓபிஎஸ் தேனில் தனது சொந்த ஊரில் உள்ள பண்ணை வீட்டில் சந்தித்தால் மேலும் பலர் தன்பக்கம் வருவார்கள் என எதிர்பார்க்கிறார்.
பிரம்மாண்ட வரவேற்பு
இதற்காக அவர் இன்று விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக தேனி புறப்பட்டுச் செல்கிறார். இதற்காக சுமார் 200 கார்களில் அவருக்கு வரவேற்பு அளிக்க அவரது மகன்களான ரவீந்திரநாத் மற்றும் ஜெயப்பிரதீப் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் தற்போது எடப்பாடி தரப்பில் உள்ள ஆர்பி உதயகுமார், ராஜன்செல்லப்பா, செல்லூர் ராஜூ ஆகியோருக்கு பன்னீர்செல்வத்தின் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக பிளக்ஸ் பேனர்கள், வரவேற்பு தோரணங்கள் என மதுரை களை கட்டியுள்ளது.
நீண்ட ஆலோசனை
அதுமட்டுமல்லாமல் மதுரை புறநகர் பகுதியில் இருந்து தேனி வரை ஏராளமான இடங்களில் ஆங்காங்கே பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை நேற்று முன்தினம் இருந்தே தொடங்கியுள்ள நிலையில் தற்போது வரவேற்க தயாராகி வருகின்றனர் தொண்டர்கள். தென்மாவட்டங்களில் குறிப்பாக தனது சொந்த மாவட்டத்திலேயே செல்வாக்கு இல்லை என எடப்பாடி தரப்பின் கூற்றை பொய்யாக்கும் வகையில் இந்த திட்டத்தை தீட்டி இருக்கிறார். இதுமட்டமல்லாமல் தொலைபேசி மூலம் பல்வேறு மாவட்ட செயலாளர்களுக்கும் ஒன்றிய செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அதிமுகவில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.