“விசா நடைமுறையே எனக்குத் தெரியாது.. பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை” - கார்த்தி சிதம்பரம் விளக்கம்!
சென்னை: சீனர்களுக்கு விசா பெற்றுத் தந்த விவகாரத்தில் நான் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபடவில்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
என் தந்தையை குறிவைத்து என் மீது குற்றம்சாட்டப்படுகிறது என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.
சிபிஐ விசாரணை தொடர்பாக அறிக்கை விடுத்துள்ள கார்த்தி சிதம்பரம், இந்திய நாட்டின் நீதித்துறை மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

கார்த்தி சிதம்பரம்
சிவகங்கை மக்களவை தொகுதி எம்.பியான கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் மகன் ஆவார். சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கியது தொடர்பான வழக்கில், கார்த்தி சிதம்பரம் 2வது குற்றவாளியாக சிபிஐ அதிகாரிகளால் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் முதல் குற்றவாளியாக சிபிஐயால் குற்றம்சாட்டப்பட்ட ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்ய
கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கு சிபிஐ அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனை தவிர்ப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கோரியுள்ளார். இந்நிலையில், இந்த விசா மோசடி வழக்கு தொடர்பாகவும், சிபிஐ விசாரணை குறித்தும் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

என் அப்பாவை குறிவைத்து
அவரது அறிக்கையில், "மத்திய அரசு மீண்டும் ஒரு முறை என் மீது தவறான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டைக் கூறுவதால் நான் அஞ்சப் போவதில்லை. என் தந்தையை குறிவைத்து என் மீது குற்றம்சாட்டப்படுகிறது. அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் கடந்த 7 ஆண்டுகளில் 6 முறை எனது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக எனது மற்றும் என்னுடன் இருப்பவர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. அரசால் தொடர்ந்து தொந்தரவுகளுக்கு உள்ளாகி வருகிறோம்." என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சம்பந்தமே இல்லை
இந்தியாவில் விசா பெறுவதற்கு என்ன நடைமுறை என்பது கூட முழுமையாக எனக்குத் தெரியாது. விசா விவகாரத்தில் நான் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, போன் மூலமாகவோ, எந்த வகையிலுமோ தலையிடவில்லை. எஃப்.ஐ.ஆரில் உள்ள நிறுவனத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என் மீது சிபிஐ கூறியுள்ள குற்றச்சாட்டுகள் நகைப்பிற்குரியவை.

உண்மை வெல்லும்
எனது பயணங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனது மகளின் பல்கலைக்கழகத்திற்கு செல்லக்கூட கோர்ட்டுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனினும், இந்திய நாட்டின் நீதித்துறை மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறேன். உண்மை வெல்லும். ஆனால் இப்போது நடப்பது துன்புறுத்தல் இல்லையா?" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications