அப்பா இருந்தாருங்க... நான் அதில் சேரவில்லை... நடிகர் பிரபு விளக்கம்
Recommended Video
சென்னை: காங்கிரஸ் கட்சியில் அப்பா இருந்தார் என்பதற்காக நானும் அதில் போய் சேர வேண்டுமா என்ன என்று நடிகர் பிரபு கேள்வி எழுப்பியுள்ளார்.
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நீண்ட நெடுங்காலம் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். சிவாஜியின் ரசிகர்களால் காங்கிரஸ் பல வகைகளில் பலன் அடைந்தது. ஆனால் சிவாஜியை காங்கிரஸ் கண்டு கொள்ளவில்லை என்ற குமைச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் காங்கிரஸிலிருந்து விலகினார்.
தனிக் கட்சி கண்ட சிவாஜி பின்னர் தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்தார். அரசியலை விட்டு விலகினார். அரசியல்வாதியாக இல்லாமல், நடிகராக மறைந்தார். இந்த நிலையில் அவரது மகன் பிரபு காங்கிரஸில் சேரப் போவதாக ஒரு தகவல் உலா வருகிறது. இதை அவர் மறுத்துள்ளார்.
நான் காங்.யில் சேரவில்லை
சென்னையில் இன்று உத்தரவு மஹாராஜா திரைப்பட விழாவில் நடிகர் பிரபு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் நான் காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை.
அப்பா இருந்தார்
என் அப்பா காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தார். அக் கட்சி வளம் பெற பாடுபட்டார். அப்பா காங்கிரஸில் இருந்த காரணத்துக்காக நானும் காங்கிரஸில் சேருவேன் என்பது தவறு.
இது தவறான செய்தி
நான் காங்கிரஸ் கட்சியில் சேருவதாக செய்திகளை வெளியிடுவதற்கு முன் என்னிடம் கேட்டிருந்தால் நான் சொல்லியிருப்பேன். அதற்குள் தவறான செய்திகள் பரப்பப்பட்டன.
அன்னை இல்லத்துக்கு வரவேற்போம்
எங்களது அன்னை இல்லத்துக்கு சோனியா காந்தி வந்துள்ளார். அதுபோல் ராகுல் காந்தி வந்தாலும் வரவேற்போம். அதற்காக கட்சியில் சேர்ந்துவிட்டேன் என வதந்தி பரப்புவது தவறு. காங்கிரஸ் கட்சி என்றில்லை, எந்த கட்சியில் சேருவதாக இருந்தாலும் எல்லாருக்கும் சொல்லிவிட்டுதான் சேருவேன் என்றார் பிரபு.