தூங்கவே விடல.. “சீதை போல நிரூபிக்கத் தயார்”.. களத்திற்குச் செல்வேன்.. கொந்தளித்த காயத்ரி!
சென்னை : தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் முன்னிலையில் சீதை போல அக்னி பரீட்சை செய்து பாஜக மீதான விசுவாசத்தை நிரூபிக்கவும் எனக்கு தயக்கமில்லை என பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக தமிழக பாஜகவில் குழப்பம் நீடித்து வருகிறது. மூத்த தலைவர்களை புறக்கணிப்பதாக அண்ணாமலை மீது புகார் எழுந்துள்ள நிலையில், சமீபத்தில் பாஜவில் நிர்வாகிகளிடையே நடைபெற்ற மோதல் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் அண்ணாமலையால் கட்சியில் இருந்து 6 மாதங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், களத்திற்குச் சென்று மக்களைச் சந்திப்பேன் என அறிவித்துள்ளார்.

பாஜக சலசலப்பு
பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் டெய்சி சரண் மற்றும் ஓபிசி பிரிவு மாநிலச் செயலாளர் சூர்யா சிவா ஆகியோருக்கு இடையே நடந்த போன் உரையாடல் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பகீர் கிளப்பியது. அந்த ஆடியோவில் திருச்சி சூர்யா கடுமையான வார்த்தைகளால் டெய்சி சரணை வசைபாடி இருந்தார். இதுகுறித்து காயத்ரி ரகுராம் ட்விட்டரில் திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். முன்னதாக, தன்னை மாநில தலைமை புறக்கணிப்பதாக அண்ணாமலை பெயரைக் குறிப்பிடாமல் தொடர்ந்து விமர்சித்து வந்தார் காயத்ரி.

இடைநீக்கம்
இதையடுத்து, காயத்ரி ரகுராமை 6 மாதம் சஸ்பெண்ட் செய்த அண்ணாமலை, திருச்சி சூர்யா ஆடியோ குறித்து விசாரிக்க ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு உத்தரவிட்டார். தன் தரப்பு விளக்கத்தைக் கேட்காமலேயே தன்னை இடைநீக்கம் செய்துவிட்டதாக காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டினார். 8 வருடங்களாக கட்சியில் பணியாற்றி எந்தத் தவறும் செய்யாத தனக்கு, விளக்கம் கூட கேட்காமல் தண்டனை கொடுத்தது மன உளைச்சலை ஏற்படுத்துவதாக தெரிவித்தார் காயத்ரி.

காயத்ரி அதிர்ச்சி
தொடர்ந்து, காயத்ரியை, அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதற்கு பதிலடியாக முட்டாள்களுக்கெல்லாம் பதில் சொல்ல நேரமில்லை எனத் தெரிவித்தார் காயத்ரி. பாஜகவினரே காயத்ரி ரகுராமை கடுமையாக தாக்கி வருவதால் அவர் மாற்றுக் கட்சிகளுக்கு செல்லக்கூடுமோ என்ற கேள்வி எழுந்தது. எனினும், தொடர்ந்து பாஜகவுக்காக பணியாற்றுவேன் என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

சீதை போல நிரூபிக்கத் தயார்
இந்நிலையில், இன்று தொடர்ச்சியாக பல ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ளார் காயத்ரி ரகுராம். தனது ட்விட்டர் பக்கத்தில், "என்னை வெளியேற்ற விரும்பியவர்கள், நீங்கள் விரும்பியதை அடைய நான் உங்களுக்கு போதுமான இடத்தை அளித்துள்ளேன். என்னை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று விரும்பியவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் முன்னிலையில் சீதையின் அக்னி பரீட்சை போன்று பாஜக மீதான விசுவாசத்தை நிரூபிக்கவும் எனக்கு தயக்கமில்லை." எனத் தெரிவித்துள்ளார்.

திமுக - விசிக - வலதுசாரி
மேலும், "பாஜகவில் சுதந்திரமாகப் பணியாற்ற விரும்புகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் குறிவைக்கப்பட்டேன், நான் தொடர்ந்து குறிவைக்கப்பட்டதால் பெரும்பாலான இரவுகளில் நான் சரியாக தூங்கவில்லை. திமுக, விசிகவால் ட்ரோல் செய்யப்பட்டேன். இப்போது வலதுசாரி ஆதரவாளர்களின் ட்ரோல்களால் நான் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறேன்" என குமுறியுள்ளார் காயத்ரி.

களத்திற்குச் செல்வேன்
மேலும், "ட்விட்டரில் மட்டும் இருப்பவர்களை விட, களத்தில் இருப்பவர்களுக்கு உண்மை தெரியும். அதிகாரப்பூர்வ பதவியில் இருப்பவர்களுக்கு உண்மை தெரியும். இந்த முறைகேடுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். நான் எனது பணியை களத்தில் செய்து, பாஜக தொண்டராக மக்களைச் சென்றடைவேன். அனைத்து ஆதரவாளர்களுக்கும் நன்றி. என்னை வேலை செய்ய விடுங்கள்." எனத் தெரிவித்துள்ளார்.

காலம் என் காயத்தை ஆற்றும்
"நமது தலைசிறந்த தலைவர்கள் பல சவால்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களில் பலர் இத்தகைய இடைவெளிகளை சந்தித்துள்ளனர். காலம் என் காயங்களை ஆற்றும். இந்த நேரத்தை ஆன்மீக ரீதியிலும் ஆக்கப்பூர்வமாகவும் மக்களைச் சென்றடைய பயன்படுத்துவேன். எனது ட்விட்டர் பக்கம் நீண்ட காலமாக அதிகமானோர் பின்பற்றப்படாமல் தடுக்கப்பட்டிருப்பதை அறிவேன். எப்படியிருந்தாலும், நான் மலிவான தந்திரங்களைக் கையாள்வதில்லை." என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications