நான் யார் காலிலும் விழமுடியாது.. சர்டிபிகேட் வேண்டாம்! சு.சுவாமி பற்றிய கேள்வியால் டென்ஷனான அண்ணாமலை
சென்னை : நான் போய் சிலர் காலில் விழுந்தால், என்னை பாராட்டிப் பேசுவார்கள். 30, 40 ஆண்டுகளாக இந்த கட்சியை தாங்கி இருப்பதாக சிலர் நினைக்கின்றனர். அவர்கள் காலில் என்னால் போய் விழ முடியாது. சுப்பிரமணியன் சுவாமிக்கும் இது பொருந்தும் என காட்டமாகப் பேசினார் பாஜக மாநிலத் தலைவர் அண்னாமலை.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் அண்ணாமலை கோபமாகப் பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
முன்னதாக, சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம் பற்றிய கேள்விக்கும் அவரை சீண்டும் விதமாக பதில் அளித்தார் அண்ணாமலை. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலில் விழுந்தால்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அண்ணாமலை. அப்போது, சுப்பிரமணியன் சுவாமி முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அண்ணாமலை போய் சிலர் காலில் விழுந்தால், என்னை பாராட்டிப் பேசுவார்கள். 30, 40 ஆண்டுகளாக இந்த கட்சியை தாங்கி இருப்பதாக சிலர் நினைக்கின்றனர். அவர்கள் காலில் என்னால் போய் விழ முடியாது. சுப்பிரமணியன் சுவாமிக்கும் இது பொருந்தும் என்றார்.

சர்டிபிகேட் தேவையில்லை
மேலும், சுப்பிரமணியன் சுவாமி கட்சிக்காக உழைத்ததாக சொல்லிக் கொள்வோரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக அவர்களது வீட்டுக்குச் சென்று நான் தேநீர் அருந்திக் கொண்டிருக்க முடியாது. நான் நல்லவனா என சுப்பிரமணியன் சுவாமி ஒன்றும் சர்டிபிகேட் கொடுக்க தேவையில்லை. கட்சியில் சிலர் என்னை எதிர்ப்பது நல்லதுதான், வளரும் கட்சி என்றால் அப்படித்தான் இருக்கும். பாஜக அடிமைக் கட்சியல்ல. 10ல் 2 பேர் என்னை எதிர்க்கத்தான் செய்வார்கள். அதை நான் வரவேற்கிறேன்.

வாரிசு
நாங்கள் வாரிசு அரசியல் நடத்தவில்லை. 18 கோடி தொண்டர்கள் இருக்கும் கட்சி இது. பாஜகவில் எங்கோ யாரோ ஒருவர் மகன் வேண்டுமானால் பதவிக்கு வந்திருக்க முடியும். அதை வாரிசு அரசியல் என்று கூற முடியாது. பிரதமர் தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என தமிழக பாஜக சார்பில் நாங்கள் விரும்புகின்றோம். அது குறித்து அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் தேசிய தலைமையிடம் இருந்து வரவில்லை" எனத் தெரிவித்தார்.

சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்
முன்னதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் நான் மட்டும்தான் திமுகவுக்கு எதிர்க்கட்சிபோல் தெரிகிறது. ஸ்டாலின் உறுமினால் பயந்து பதுங்கும் பூனையாக தமிழக பாஜக இருக்கிறது. சினிமா கலாச்சாரம் தமிழக பாஜகவை அழித்துவிட்டது" எனக் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மோடி அவமதித்தது இல்லை
சுப்பிரமணிய சுவாமி பற்றிய கேள்விக்கு அண்ணாமலை அளித்த பதில் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம், "இன்றைய செய்தியாளர் சந்திப்பில் சுப்ரமணிய சாமி குறித்து அண்ணாமலை ஆணவத்துடனுடன், மரியாதை குறைவாகவும் பேசி இருக்கிறார். குறைந்தபட்சம் அவரது வயது மற்றும் அனுபவத்துக்காவது அண்ணாமலை மரியாதை கொடுத்து இருக்க வேண்டும். கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அனைவரையும் அவமானப்படுத்துவதே அண்ணாமலையின் அரசியல். சுப்ரமணியன் சாமி ஒரு விமர்சகராக பிரதமர் நரேந்திர மோடியிடமே கேள்விகளை எழுப்பி இருக்கிறார். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி சுப்ரமணிய சாமியை ஒருபோதும் அவமதிக்கும் வகையில் பேசியது இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications