இடிக்க முயன்ற அதிமுக அரசு.. ராணி மேரி கல்லூரிக்காக நான் இறங்கி போராடினேன் - முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை : அதிமுக அரசு சென்னை ராணி மேரி கல்லூரியை இடிக்க முயன்றபோது, மாணவர்களுக்கு ஆதரவாக நான் களத்தில் இறங்கிப் போராடினேன் என ராணி மேரி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை ராணி மேரி கல்லூரியின் 104வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ராணி மேரி கல்லூரிக்காக போராடியது எனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்று. மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக என்னை போலீசார் கைது செய்தனர் எனத் தெரிவித்துள்ளார்.

நான் போராடினேன்
ராணி மேரி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "கம்பீரமான பாரம்பரியமான பெருமையை கொண்டது ராணி மேரி கல்லூரி. இந்தியாவில் முதன்முதலாக தொடங்கப்பட்ட 3 மகளிர் கல்லூரிகளில் ஒன்று. தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் மகளிர் கல்லூரி என்ற பெருமையையும் கொண்டது ராணி மேரி கல்லூரி. இத்தகைய பெருமை கொண்ட ராணி மேரி கல்லூரியை இடிக்க கடந்த கால அதிமுக அரசு முயன்றது. மாணவர்களுக்கு ஆதரவாக நான் களத்தில் இறங்கிப் போராடினேன். அதற்காக போலீசார் என்னை கைது செய்தனர். ராணி மேரி கல்லூரிக்காக போராடியது எனது வாழ்நாளில் மறக்க முடியாதது.

பெண் கல்வி
104 ஆண்டுகளில் ராணி மேரி கல்லூரி உருவாகியுள்ள பட்டதாரிகளை நினைத்து பார்த்தால் மலைப்பாகவும் வியப்பாகவும் உள்ளது. ராணி மேரி கல்லூரியின் வளாகத்திலேயே விடுதி கட்டித் தரப்படும். பெண்களின் முன்னேற்றத்திற்காக திமுக தொடர்ந்து பாடுபடும். அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கேட்ட காலத்தில் பெண் கல்வியை வலியுறுத்தியவர் தந்தை பெரியார். எத்தனையோ கலாச்சாரம், மத தடைகளை கடந்து தான் பெண் கல்வியில் தற்போதைய நிலையை எட்டி இருக்கிறோம்.

திமுக அரசின் திட்டங்கள்
பெண்கள் பெயருக்கு பின்னால் பட்டம் இருப்பது, அவர்களின் அடிப்படை உரிமை. பெண்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற திட்டங்களை திமுக தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ளது. அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு கலைஞர் அளித்தார், தற்போது 40%ஆக உள்ளது. புதுமைப் பெண் உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் ராணி மேரி கல்லூரியில் 1039 மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். பெண்கள் முன்னேறி வருவதைப் பார்த்தால் காலப்போக்கில் ஆண்களுக்கு இடஒதுக்கீடு கோரும் நிலை கூட ஏற்படலாம்.

அடுத்த தலைமுறைக்கு
பெண்களுக்கு ஒளிவிளக்காக ராணி மேரி கல்லூரி திகழ்கிறது. பட்டம் பெறுபவர்கள் கல்லூரியில் இருந்து விடைபெறுகிறீர்களே தவிர, கற்பதில் இருந்து அல்ல. பட்டங்களை பெறும் மாணவர்கள், பாடங்களை கற்பதில் இருந்து பாடங்களை உருவாக்கும் அளவிற்கு உயர வேண்டும். மாணவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக மாற வேண்டும். மேலும் மேலும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும். முதல் தலைமுறை பட்டதாரிகள் தங்களது அடுத்த தலைமுறையைப் படிக்க வைக்க வேண்டும். பட்டம் பெரும் நாள் என்பது ஒவ்வொருவரின் வாழ்நாளிலும் மறக்க முடியாத நாளாக இருக்கும். மாணவர்கள் பெற்ற அறிவு அவர்களை மேலும் மேலும் உயர்த்தட்டும்." எனப் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications