ஜெயலலிதா கைரேகை வைத்தது தெரியும்... இட்லி சாப்பிட்டாரா என்று எனக்குத் தெரியாது - ஓ.பன்னீர்செல்வம்
சென்னை: திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய 3 இடைத்தேர்தலுக்கும் வேட்பாளரை தேர்வு செய்தது ஜெயலலிதாதான் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்பல்லோ மருத்துவமனையில் அவர் என்ன உணவு சாப்பிட்டார் என்று எனக்குத் தெரியாது என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
Recommended Video
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆணையத்தில் நேற்று ஆஜரான அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 2016 செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரம் எனக்கு தெரியாது என கூறினார்.
ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது என்பதை தவிர அவருக்கு இருக்கும் வேறு உடல் உபாதைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது எனவும் கூறினார். ஜெயலலிதாவை தான் பார்க்கவேயில்லை என்று கூறினார். இன்றைய தினம் இடைத்தேர்தல் படிவத்தில் ஜெயலலிதா கைரேகை வைத்தாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், கைரேகை வைத்தது எனக்குத் தெரியும் என்றார்.

ஜெயலலிதா கைரேகை
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதுதான் திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய 3 சட்டசபைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது வேட்பாளர்களை தேர்வு செய்தது ஜெயலலிதாதான் என்று இன்றைய தினம் ஓ.பன்னீர் செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார். இடைத்தேர்தல் வேட்பாளர் அங்கீகாரப்படிவத்தில் பொதுச்செயலாளர் என்ற முறையில் கைரேகை வைத்தது ஜெயலலிதாதான் என்று கூறினார்.

என்ன சாப்பிட்டார் என தெரியாது
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது மதுசூதனன், சிஆர் சரஸ்வதி ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது அம்மா இன்று இட்லி சாப்பிட்டார், உப்புமா சாப்பிட்டார் பொங்கல் சாப்பிட்டார் என்று பேட்டி தருவார்கள். இன்றைய தினம் ஓ.பன்னீர் செல்வத்திடம் ஜெயலலிதா என்ன சாப்பிட்டார் என்று தெரியுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், மருத்துவமனையில் ஜெயலலிதா என்ன சாப்பிட்டார் என்று எனக்குத் தெரியாது என்று சொன்னார்.

சசிகலா சொன்னது என்ன?
ஜெயலலிதாவைப் பற்றி அவ்வப்போது சசிகலாதான் எனக்கு சொல்வார். அரசாங்க பணிகள் தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எந்த தகவலையும் என்னிடம் கூறவில்லை. அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது சிலமுறை அவர் நன்றாக இருப்பதாக சசிகலா கூறினார். சசிகலா கூறியதை சக அமைச்சர்களிடம் மட்டுமே கூறினேன். பொதுவெளியில் எங்கும் பேசவில்லை என்று கூறினார்.

அப்பல்லோ தரப்பு எதிர்ப்பு
ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகியுள்ள ஓ.பன்னீர்செல்வத்திடம் மருத்துவம் சார்ந்த கேள்விகளை கேட்க அப்பல்லோ தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து எதுவும் தெரியாது என்று நேற்றே ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்ததால் அது குறித்து கேட்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மருத்துவ சிசிக்சை பற்றி தெரியாது
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணைய கோப்பில் துணை முதலமைச்சர் என்ற அடிப்படையில் நானும் கையெழுத்திட்டுள்ளேன் எனவும், ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது ? எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினார்கள் என்ற விவரம் தனக்கு தெரியாது எனவும் நேற்றைய தினம் ஓ.பன்னீர் செல்வம் வாக்குமூலம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications