ஈரோடு கிழக்கில் பாஜக போட்டியிட்டால் விட்டுக் கொடுக்க ரெடி! ஓபிஎஸ் தடாலடி அறிவிப்பு
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிட விரும்பினால் நாங்கள் முழு ஆதரவு அளிப்போம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் ஈபிஎஸ் அணி போட்டியிட தயாராகியுள்ள சூழலில், நாங்கள் போட்டியிடுவோம் என அறிவித்துள்ளார் ஓபிஎஸ். அதேநேரம், பாஜக கேட்டால் ஆதரவு அளிப்போம் என்று பாஜகவை விட்டுக்கொடுக்காமல் பேசியுள்ளார்.
அதிமுக ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ் என இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்
அப்போது ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பான முக்கிய அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார். மேலும், பாஜகவுக்கும் மறைமுகமாக ஒரு வேண்டுகோளை வைத்திருக்கிறார் ஓபிஎஸ்.
இடைத்தேர்தல் கோதாவில் இறங்கிய ஓபிஎஸ்.. நான் தான் ஒருங்கிணைப்பாளர்.. 'இரட்டை இலை’ எங்களுக்கே - பரபர!
ஓபிஎஸ் நிலைப்பாடு
திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் கடந்த முறை தமாகா போட்டியிட்ட நிலையில், இந்த முறை அதிமுக போட்டியிட விட்டுக்கொடுத்துள்ளது. இதனால் காங்கிரஸ் - அதிமுக இடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது. அதிமுகவில் தனி அணியாகச் செயல்படும் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுகிறோம். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எங்களுக்கு முழு உரிமை உள்ளதால் போட்டியிடுகிறோம். தேர்தல் ஆணைய ஆவணங்களின் படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான் தான். இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த எங்களுக்கே முழு உரிமை உள்ளது.
இரட்டை இலை - வேறு சின்னம்
இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டால் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவோம். ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திட தயாராகவே இருக்கிறேன். அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே என் விருப்பம். ஒன்றிணைந்து செயல்படுவது தொடர்பாக பழனிசாமி அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார். சட்டவிரோதமாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம்.
பாஜக போட்டியிட்டால் ஆதரவு
எங்களிடமும் கூட்டணிக் கட்சிகள் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் நாங்கள் உறுதியாக ஆதரவளிப்போம். அதிமுக வேட்பாளர் யார் என்பதை நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுப்போம். நாளை மறுநாள் நடக்க உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நல்ல முடிவெடுப்போம்." எனத் தெரிவித்துள்ளார்.
தேசியக் கட்சிக்கு வாய்ப்பு
பாஜக போட்டியிட்டால் நாங்கள் உறுதியாக ஆதரவு வழங்குவோம். தேசியக் கட்சி என்ற அடிப்படையில் அவர்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இருப்பதால், அவர்களுக்கு இந்த இடைத்தேர்தல் ஒரு நல்வாய்ப்பாக இருக்கும் என்று கருதி நாங்கள் பாஜகவை ஆதரிப்போம். ஈரோடு கிழக்கு நாங்கள் வென்ற தொகுதி அல்ல, தமாகா போட்டியிட்ட தொகுதி. எனவே கூட்டணி கட்சியான பாஜக போட்டியிட விரும்பினால் உறுதியாக ஆதரவு அளிப்போம் எனத் தெரிவித்துள்ளார் ஓபிஎஸ்.
பாஜக விவகாரத்தில் ஓபிஎஸ் ஈபிஎஸ்
பாஜக விரும்பினால் அவர்கள் போட்டியிட ஆதரவு அளிப்போம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளதன் மூலம், பாஜகவுக்கு இணக்கமான போக்கைக் கடைபிடிப்பதை தொடர்ந்துள்ளார் ஓபிஎஸ். ஒருபக்கம், ஈபிஎஸ் தரப்பு தாங்கள் போட்டியிடுவதை உறுதி செய்துவிட்டு இன்று மாலை தான் பாஜகவினரை சந்தித்துப் பேச உள்ளது. ஆனால், ஓபிஎஸ்ஸோ, பாஜக போட்டியிட்டால் நாங்கள் போட்டியிடாமல் பாஜகவுக்கு ஆதரவு அளிப்போம் எனக் கூறி இருக்கிறார்.
பாஜகவிடம் மறைமுக ஆதரவு கோரும் ஓபிஎஸ்
அதிமுகவில் ஓபிஎஸ் எடப்பாடி மோதல் தொடங்கியது முதலே, வெளிப்படையாக பாஜகவுக்கு முழு ஆதரவை வழங்கி வருகிறார் ஓபிஎஸ். அந்தவகையில் தற்போதும் பாஜகவுக்கு உறுதுணையாகவே இருப்பதாகவே பேசியுள்ளார். இதன் மூலம் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடாவிட்டால் தங்கள் அணிக்கு பாஜக ஆதரவு தரும்படி மறைமுகமாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ஓபிஎஸ் என்கிறார்கள்.