பாஜகவிற்கு ரஜினி ஆதரவு கொடுத்தால் வரவேற்போம்.. முருகனுக்கு இன்னும் ஆசை போகலியே!
தேசமும் தெய்வீகமும் என் இரு கண்கள் என வாழ்ந்த முத்துராமலிங்க தேவரின் வழியில் எங்களது கட்சியானது நடந்துகொண்டிருக்கிறது என தெரிவித்த முருகன், ரஜினி ஆதரவு தெரிவித்தால் அதனை வரவேற்போம் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுகவிடம் தொகுதி பங்கீடு சீட் கேட்டு நெருக்கடி கொடுக்கவில்லை என்று பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். தேசமும் தெய்வீகமும் என் இரு கண்கள் என வாழ்ந்த முத்துராமலிங்க தேவரின் வழியில் எங்களது கட்சியானது நடந்துகொண்டிருக்கிறது என தெரிவித்த முருகன், ரஜினி ஆதரவு தெரிவித்தால் அதனை வரவேற்போம் என்று தெரிவித்துள்ளார்.
பாஜக சார்பில், தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, தமிழக பாஜக தலைவர் மதுரை வந்தார்.
தைப்பூச திருவிழாவிற்கு அரசு விடுமுறை அளித்ததற்கு தமிழக அரசுக்கு, எல்.முருகன் நன்றி கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய எல். முருகன், ரஜினிகாந்த் அரசியலுக்கு வராத பட்சத்தில், பாஜகவானது, அவருடைய ஆதரவு கேட்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த முருகன். தேசமும் தெய்வீகமும் என் இரு கண்கள் என வாழ்ந்த முத்துராமலிங்க தேவரின் வழியில் எங்களது கட்சியானது நடந்துகொண்டிருக்கிறது என தெரிவித்த முருகன், ரஜினி ஆதரவு தெரிவித்தால் அதனை வரவேற்போம் என்று கூறினார்.
அதிமுகவுடனான கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில், ஆட்சியில் பங்கு கேட்க நினைக்கும் பாஜகவின் எண்ணம் போகாத ஊருக்கு வழி தேடுவது போல என வைகைச்செல்வன் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தல் முடியட்டும், அதன் பிறகு அதனை குறித்து பேசிக்கொள்ளலாம் என்றார்.
அஞ்சல்துறை தேர்வில் தமிழ் மொழி சேர்க்கபடும் என மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்தது போல, விரைவில் தமிழ் மொழி சேர்க்கப்படும் என்று கூறினார் முருகன்.
கல்பாக்கம் அணுமின்நிலையத்திற்கான தேர்வு தமிழகத்தில் நடைபெறாமல், மும்பையில் நடைபெறுவதாக எழும் குற்றசாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தியாவிலுள்ள அனைத்து அணுமின்நிலையங்களில் கல்பாக்கம் ஒரு பகுதி எனவும், அதன் தலைமையிடம் மும்பையில் இருப்பதனால், தேர்வு மும்பையில் நடப்பது இயல்பான விஷயம் என தெரிவித்த எல்.முருகன், வேண்டுமானால் தமிழகத்தில் வைக்கலாம் என கோரிக்கையாக வைக்கலாமே தவிர அனைத்தையும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது என தெரிவித்தார்.
அமித்ஷா வருவது குறித்து அதிகாரபூர்வமான தகவல் ஏதும் கிடைக்க பெறவில்லை எனவும், தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதன்படி செயல்படுவோம் என்று தெரிவித்தார்.
சிறுபான்மையினருக்கு எதிரி பாஜக தான், என முக ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த முருகன், அனைத்து கிறிஸ்துவ, முஸ்லீம் சகோதரர்கள் அனைவரும் பாஜகவில் ஆர்வமுடன் சேர்வதாகவும், நாட்டை சரியான பாதையில் பாஜக கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.
அதிமுக கூட்டணியில், 40க்கும் மேற்பட்ட தொகுதிக்கு சீட் கேட்டு நெருக்கடி கொடுக்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த முருகன், உங்களின் யூகத்திற்கு பதில் தெரிவிக்க முடியாது என்று கூறினார். தொகுதி பங்கீடு குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறினார்.
தைப்பூசத்திற்கான அரசு விடுமுறை நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையாகவே நிறைவேற்றப்பட்டது என சீமான் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த எல். முருகன், பாஜக வேல்யாத்திரை நடத்தி, அதன் மூலம் வைக்கப்பட்ட கோரிக்கையின் காரணமாகவே தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை வழங்கப்பட்டது என தெரிவித்தார்.