"சூர்யா".. சரியாதானே சொல்றார்.. நிச்சயம் மாற்றத்தை அவர் தருவார்.. "இளம் காளைகள் கட்சி" பரபர அறிக்கை
இளம் காளைகள் கட்சி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது
சென்னை: "சூர்யா சொல்வதில் தவறு ஏதும் இல்லை.. அவரால் தமிழக அரசியலில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்" என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று "இளம் காளைகள் கட்சி" அறிக்கை ஒன்றை வெளியிடவும், அது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
'அகரம்' அறக்கட்டளை மூலம் வசதி இல்லாத குழந்தைகளையும், படிப்பை தொடரமுடியாமல் தவிக்கும் பிள்ளைகளையும் படிக்க வைத்து வருகிறார் சூர்யா.. எப்போது அகரம் ஆரம்பித்தாரோ அப்போதே சூர்யா மீதான சமூக பார்வை விழுந்துவிட்டது.

இந்த சமயத்தில் தான், கல்வி கொள்கை குறித்த விவகாரம் வெடித்தது.. ஒவ்வொரு முறையும் தன்னுடைய ஆணித்தரமான கருத்துக்களை பகிரங்கமாக எடுத்து சொல்லி வந்தார் சூர்யா.. மத்திய அரசு & மாநில அரசுகளின் அதிருப்தியை நேரடியாகவே சம்பாதித்தார்.
தன் அறக்கட்டளை சார்பாக பிள்ளைகள் படிப்பதால், அவர்களின் நேரடி சூழல்கள், கல்வி குறித்த அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை உள்வாங்கியதால், தன்னுடைய கருத்து நிலைப்பாட்டில் சூர்யா உறுதியாக இருந்து வருகிறார்.
சமீபத்தில் நீட் தேர்வு குறித்து சூர்யா வெளியிட்ட அறிக்கையானது, மத்தியில் விமர்சனங்கள் பலமாக எழுப்பியது.. காரசார விவாதங்களையும் கொண்டு வந்து நிறுத்தியது.. இறுதியில் சோஷியல் மீடியாவில் சூர்யாவுக்கு ஆதரவுகள் பெருக ஆரம்பித்துவிட்டன.. "சூர்யா சரியாதானே சொல்றார்? அவர் கேட்பதில் என்ன தப்பு?' என்ற பரவலான ஆதரவும் எழுந்தது.. இதை சிலர் அரசியல் நோக்கமாக திரித்து வருகின்றனர்.. பலர் இதை பொதுநலன் சார்ந்த விஷயமாக கையாள்கிறார்கள். இருந்தாலும் சூர்யா, எதையுமே கண்டுகொள்ளாமல், எந்த பக்கமும் சாராமல், அவர் அவராகவே இயல்பாகவே செயல்பட்டு வருகிறார்.
இந்த சமயத்தில்தான், சூர்யாவின் மதுரை ரசிகர்கள் "வாடிவாசல் நாயகனே அரசியல் களத்திற்கு வாருங்கள்" என்று போஸ்டர் அடித்து அழைப்பு விடுத்தனர்.. "அநீதிக்கு எதிராக குரல் இனி அரசியலில் ஒலிக்கட்டும்..
அறம் சார்ந்த அரசியலை முன்னெடுப்போம் வாருங்கள்" என்று ஒட்டினர்.. அதுமட்டுமின்றி சூர்யாவின் கட்சிக்கு 'இளம் காளைகள் கட்சி' என்ற பெயரையும் அறிவித்து விட்டனர்.

இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.. சூர்யா விட்ட அறிக்கைக்கும், இந்த போஸ்டருக்கும் ஏதாவது சம்பந்தமிருக்குமோ என்ற ரீதியில் தொடர்பு படுத்தி பார்க்கப்பட்டது.. ஆனால், அப்படி எதுவுமே இல்லை, சூர்யா எந்த கட்சியையும் ஆரம்பிக்கவில்லை என்று இளம் காளைகள் கட்சி அமைப்பு தெளிவு படுத்தி உள்ளது.. இது சம்பந்தமாக ஒரு அறிக்கையையும் விடுத்துள்ளது.
அந்த அறிக்கையில், "இளம் காளைகள் கட்சியானது, ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு இளைஞர்களால் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளாக தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், மதுரையின் பாரம்பரிய அடையாளம் தமுக்கம் மைதானம் மீட்க வழக்கு தொடர்ந்தது போன்ற சட்ட போராட்டங்களையும் நடத்தியது.
மாணவர்களின் கல்வி உரிமைகள் தமிழகத்தின் மாநில உரிமைகள் பறிபோகும் இன்றைய அரசியல் சூழ்நிலையில், நீட், புதிய கல்வி கொள்கை போன்றவற்றை எதிர்த்து குரல் கொடுத்த சூர்யா அவர்கள், அரசியல் களத்திற்கு வர வேண்டும்.. அவரால் தமிழக அரசியலில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
அதனால் அவரை அரசியல் களத்திற்கு அழைக்கும் விதமாக எங்கள் கட்சியின் சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டது.. சூர்யா அவர்கள் அரசியல் களத்திற்கு வருவதும், கட்சி தொடங்குவதும் அவரது தனிப்பட்ட முடிவு.. மற்றபடி இது சூர்யா ரசிகர்களினால் தொடங்கப்பட்ட கட்சி என்பது பொய்யான தகவல் என்பதை தெரிவித்து கொள்கிறோம்" என்று விளக்கம் தந்துள்ளது.
ஆக, சூர்யாவுக்கும் இந்த கட்சிக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லை என்பது தெளிவானாலும், சூர்யாவை அரசியலுக்கு அழைப்பது உண்மை என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.. "நடிக்கும் அரசியல்வாதிகளைவிட, நடிகராக இருந்தாலும், எதார்த்த வாழ்வில் நடிக்க தெரியாத சூர்யா போன்றவர்கள் அரசியலுக்கு வருவது மக்களுக்கு நல்லது!" என்ற கருத்தைதான் இன்னமும் பெரும்பாலானோர் சொல்லி வருகிறார்கள்!












Click it and Unblock the Notifications