மெல்ல நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்..இப்போ எங்கே இருக்கு தெரியுமா?
சென்னை: சென்னையில் இருந்து மணிக்கு 700 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென் கிழக்கே 700 கி.மீ தொலைவில் உள்ளது. மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
புதிய புயலுக்கு மாண்டஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் சின்னம் வலுவடைந்து வட தமிழ்நாடு - புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை நோக்கி நகரும். தமிழக கடலோர பகுதிகளில் டிசம்பர் 8 முதல் 10ஆம் தேதி வரை மணிக்கு 50 கி.மீ முதல் 70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
புயல் காரணமாக நாளை கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நாளை மறுதினம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னையிலும் 9 மற்றும் 10ம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக தஞ்சாவூர் திருவாரூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளைய தினம் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை(08-12-2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் நாளை(08-12-2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.