வடகிழக்குப் பருவமழை.. இயல்பை விட கூடுதலாக கொட்டித்தீர்க்குமாம்.. தமிழகத்தில் மழை எப்படி?
சென்னை: தென்மேற்குப் பருவமழை விடைபெற்றுள்ள நிலையில் அக்டோபர் மாதத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட அதிகமாக 115 சதவிகிதத்திற்கு மேல் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அதிக மழை பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த மே மாத இறுதியில் தொடங்கியது. பல மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்தது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அணைகள் நிரம்பி வழிகின்றன. நீர் நிலைகள் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அக்டோபர் முதல் வடகிழக்குப் பருவமழை காலம் தொடங்குகிறது. டிசம்பர் மாதம் வரை வடகிழக்குப் பருவமழை காலம் நீடிக்கும். இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பை ஒட்டியே இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம்
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பில், வடகிழக்குப் பருவமழை நடப்பாண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்க உள்ளது. நடப்பாண்டு வடகிழக்குப் பருவமழை 88 சதவிகிதம் 112 சதவிகிதம் என்ற அளவில் இருக்கும்.
அக்டோபர் மாதத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட அதிகமாக 115 சதவிகிதத்திற்கு மேல் இருக்கும். செப்டம்பர் 30ஆம் தேதியுடன் தென்மேற்கு கணக்கீடு முடிகிறது.

தென்மேற்கு பருவமழை
அக்டோபர் 1ஆம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை கணக்கீடு தொடங்குகிறது. தென்மேற்குப் பருவமழை இயல்பாக 33 செமீ பெய்யும். நடப்பாண்டு 54 சதவிகிதம் கூடுதலாக பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை
அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழை எப்படி
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையின் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில், பருவமழை குறித்த முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை நடப்பாண்டு அரியலுார், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலுார், சேலம், தஞ்சாவூர், நீலகிரி, திருச்சி, திருவாரூர், தென்காசி, துாத்துக்குடி, திருப்பத்துார் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், சராசரி மழையளவு கிடைக்கும். சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, கடலுார், காஞ்சிபுரம், தேனி, மதுரை, திருவள்ளூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், ராணிபேட்டை, விழுப்புரம், திருநெல்வேலி, வேலுார் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில், சராசரியை விட அதிக மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications