வேகம் எடுத்த கொரோனா.. தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இடத்தில் தடுப்பூசி முகாம்.. மாஸ் ஏற்பாடு!
சென்னை: தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரேநாளில் ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
இதனால் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதோடு கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.

தடுப்பூசி முகாம்
இதன் ஒருபகுதியாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியையும் அரசு துரிதப்படுத்தி வருகிறது. கொரோனாவில் இருந்து தப்பிப்பதற்கு தடுப்பூசி மட்டுமே ஆயுதம் என்பதால் இதனை தமிழக அரசு மும்முரமாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வாரந்தோறும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

ஒரு லட்சம் இடத்தில் இன்று முகாம்
இந்த முகாம்கள் மூலம் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இன்று 31வது வாரமாக தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் இன்று ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

காலை 7 மணி முதல் துவங்கிய முகாம்
அதன்படி இன்று காலை 7 மணிக்கு மெகா தடுப்பூசி முகாம் துவங்கியது. தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் இந்த முகாம்களில் பங்கேற்று இலவசமாக தடுப்பூசி போட்டு கொள்ள முடியும். தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி, ஆறு மாதங்கள் நிறைவடைந்தவர்கள், 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு, இந்த முகாமில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும். மற்றவர்கள் தனியார் மருத்துவமனையில் கட்டணம் செலுத்தி, பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

1.45 கோடிக்கும் அதிகமானவர்கள்
தமிழகத்தில் தற்போது முதல் தவணை, 2வது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் 1.45 கோடிக்கும் அதிகமானவர்கள் உள்ளனர். குறிப்பாக சென்னையை பொறுத்தமட்டில் நேற்றைய நிலவரப்படி 13 லட்சத்து 72 ஆயிரத்து 219 பேர் முதல், 2வது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். இவர்களுக்காக இன்று ஒரு வார்டுக்கு 17 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications