விழிபிதுங்க வைக்கும் இஎம்ஐ பிரச்சனை.. கைகொடுக்குமா அரசு? பெரும் எதிர்பார்ப்பில் சாமானிய மக்கள்
சென்னை: வேலைக்கு போனால் தான் வருமானம் என்ற நிலையில் பல கோடி மக்கள் இந்தியாவில் உள்ளனர். இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் எப்படி கடனுக்கான இஎம்ஐ செலுத்த முடியும் என்று மக்கள் வேதனையில் உள்ளனர். மத்திய அரசு கடந்த முறை ஏற்பட்ட பாதிப்புக்கு ஆறு மாதம் இஎம்ஐ கட்டுவதை தள்ளி வைத்ததை போல் இந்த முறையும் தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களுமே கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. சென்ற ஆண்டை விட பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. உயிரிழப்பும் உலகில் எந்த நாட்டிலும் ஏற்படாத அளவிற்கு இந்தியாவில் 2வது கொரோனா அலையில் ஏற்பட்டு வருகிறது.
நிச்சயமற்ற வாழ்க்கை சூழலால் வேலைக்கு செல்லவும் முடியாமல், வருமானம் இல்லாமல் வாழ்க்கையை நடத்த முடியாமல் பல கோடி மக்கள் தவிக்கிறார்கள். இந்த சூழலில் வங்கிகளில் வாங்கிய கடனுக்கான இஎம்ஐ தவணை எப்படி கட்ட முடியும் என்று மக்கள் வேதனையில் உள்ளனர்

முழு ஊரடங்கு
கொரோனா தொற்று மக்களுக்கு வெறும் மருத்துவ நெருக்கடி மட்டும் அல்லாமல், உளவியல் நெருக்கடியாகவும் உள்ளது. பொருளாதார நெருக்கடியாக மாறி உள்ளது. கடந்த ஆண்டு முழு ஊரடங்கு மத்திய அரசு போட்டது என்பதால் அதற்காக வங்கி கடன் இஎம்ஐ தள்ளிவைப்பை மத்திய அரசே அறிவித்தது.

வேலையில்லை
ஆனால் இந்த முறை மத்திய அரசு நாடு முழுவதும் முழு ஊரடங்கை அறிவிக்கவில்லை. அந்தந்த மாநில அரசுகளே தேவைக்கு ஏற்ப ஊரடங்கை அதிகப்படுத்தின. இப்போது கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் முழு ஊரடங்கு தான் என்கிற நிலை உள்ளது. மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.

மத்திய அரசு அறிவிக்குமா
வேலைக்கு சென்றால் தான் வருமானம் என்கிற நிலையில், அரசு பொதுமக்களுக்கு நிவாரணம் அறிவிக்க வேண்டும். இதேபோல் வங்கி கடன் இஎம்ஐ, வீட்டு வாடகை, கடை வாடகை, தனியார் நிதி நிறுவனங்களில் வங்கிய கடன் இஎம்ஐ இதையெல்லாம் கட்ட சலுகைகளை அரசு அறிவிக்க வேண்டும்.

நம்பிக்கை குரல்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு நோயாளியாக கிட்டத்தட்ட மாதக்கணக்கில் குடும்பங்கள் பல தவிக்கின்றன. உயிரிழப்புகளை சந்தித்தும் பல குடும்பங்கள் நிர்கதியாக உள்ளன. இப்படிப்பட்ட சூழலில் பொருளாதார நெருக்கடி மக்களை மேலும் மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும், எனவே இப்படிப்பட்ட மோசமான சூழலில் அரசிடம் இருந்து மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டிய குரல் வர வேண்டும் என்பதே சமானியனின் கோரிக்கையாக உள்ளது.











Click it and Unblock the Notifications