40 இடங்கள்.. தமிழகத்தில் வருமான வரித்துறை சோதனை.. ரேஷன் பொருள் சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு செக்!
சென்னை: தமிழ்நாடு அரசின் பொது விநியோக திட்டத்திற்கு பாமாயில், பருப்பு உள்ளிட்டவற்றை விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கெனவே பொங்கல் பொருட்கள் விநியோகத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், ரேஷன் பொருட்கள் தரமில்லாமல் இருப்பதாகவும் பாஜக தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. தற்போது 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அந்த வகையில் அருணாச்சலம் இம்பேக்ஸ், காமாட்சி குரூப் ஆப் கம்பெனிஸ், இண்டர்கிரேடட் சர்வீஸ் குரூப் போன்ற நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

பொதுவிநியோக திட்டத்தில் வழங்கப்படும் பொருட்களின் தரம் மோசமாக இருப்பதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இப்பிரச்சைனை கடந்த ஆண்டு பொங்கல் பொருட்கள் வழங்கியபோதே வெடித்தது.
2022ம் ஆண்டு ஜனவரியில் வழங்கப்பட்ட பொங்கல் பொருட்கள் அருணாச்சலா இன்பெக்ஸ், நேச்சுரல் ஃபுட் கமர்சியல், இண்டெகிரேடட் சர்வீஸ் பாயிண்ட் உள்ளிட்ட நிறுவனங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டன. ஆனால் இந்நிறுவனங்களின் மீதுதான் குற்றம்சாட்டு எழுந்தது. இதனையடுத்து பொங்கல் பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டு தரமற்ற பொருட்களை வழங்கியதாக இந்நிறுவனங்களுக்கு ரூ.3.75 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டது தமிழ்நாடு அரசு.
இந்நிலையில்தான் தற்போது இந்நிறுவனங்களில் ரெய்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "இந்தியாவுக்கு இந்தோனேஷியாவிலிருந்து பாமாயில் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பாமாயில், விற்பனை செய்யப்படுவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்திருந்தன.
பாமாயில் விற்பனையில் முறையான கணக்கு வழக்குகள் பின்பற்றப்படாமல் இருப்பதாகவும், சில நிறுவனங்கள் வரி செலுத்தாமல் ஏய்ப்பு செய்துள்ளதாகவும் புகார்கள் வந்தன. இதனையடுத்து நாங்கள் ரெய்டை மேற்கொண்டோம். ரெய்டில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. எனவே சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் சோதனை தொடரும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்களிடம் மீண்டும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதும், இது குறித்து பாஜக விமர்சித்திருந்ததும் பேசுபொருளாகியிருந்த நிலையில், தற்போது இந்நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனையை மேற்கொண்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications