ஆப்பு வைத்த IT.. EMI-க்கு பயந்து வீடு வாங்காத மக்கள்! சரிந்த விற்பனை.. ஆனால் சென்னை மட்டும் கெத்து!
சென்னை: டெல்லி, சென்னை போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களில் 2025ஆம் ஆண்டில் வீடு விற்பனை கடந்தாண்டை விட குறைந்ததாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிநீக்கங்கள் அதிகரித்தது, பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது போன்ற காரணங்களால், வீடுகளுக்கான தேவை குறைந்துள்ளது. இதன் காரணமாக, நாடு முழுவதும் உள்ள ஏழு பெரிய நகரங்களில் வீடு விற்பனை 2025ஆம் ஆண்டில் 14 சதவீதம் சரிந்துள்ளது. இந்தாண்டு மொத்தம் விற்பனையான வீடுகள் எண்ணிக்கை 3,95,625 மட்டுமே என வீடு மற்றும் மனை ஆலோசனை நிறுவனமான அனாரோக் கூறியுள்ளது.
அந்த நிறுவனத்தின் அறிக்கையின்படி, டெல்லி, ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற நாட்டின் வர்த்தக, பொருளாதார, ஐடி தலைநகரங்கள் என பன்முகம் கொண்ட இந்த ஏழு நகரங்களில் கடந்த 2024ஆம் ஆண்டில் மொத்தமாக 4,59,645 வீடுகள் விற்று இருந்தன.
சென்னை, தில்லி-என்சிஆர், மும்பை பெருநகர பகுதி, புனே, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் கொல்கத்தா ஆகிய 7 நகரங்களில் இந்த ஆண்டு விற்பனையான வீடுகள் எண்ணிக்கை 3,95,625 மட்டுமே. எனவே கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு விற்பனை 14 சதவீதம் குறைந்துள்ளது.

இந்தியா ரியல் எஸ்டேட்
வீடுகள் விற்பனை எண்ணிக்கை குறைந்திருந்தாலும், வீடுகள் விற்பனையின் மொத்த பண மதிப்பு அதிகரித்துள்ளது. 2024ஆம் ஆண்டில் வீட்டு விற்பனை மதிப்பு ரூ.5.68 லட்சம் கோடி இருந்தது. 2025ஆம் ஆண்டில் அது 6 சதவீதம் உயர்ந்து ரூ.6 லட்சம் கோடியை கடந்துள்ளது. வீடுகளின் சராசரி விலை அதிகரித்ததே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது. 2024ஆம் ஆண்டில் சதுர அடி என்ற அளவில் வீட்டின் விலை ரூ.8,590 ஆக இருந்தது. அது இப்போது ரூ.9,260 ஆக உயர்ந்துள்ளது. இது 8 சதவீத உயர்வாகும். முந்தைய ஆண்டுகளில் வீடுகளின் விலை உயர்வு இரட்டை இலக்க அளவில் இருந்தது. ஆனால் இவ்வாண்டு அது ஒற்றை இலக்கமாக குறைந்துள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீட்டுவிற்பனை சரிவு
நகர வாரியாக பார்க்கும்போது மும்பை பெருநகரப் பகுதியில் வீடு விற்பனை 18 சதவீதம் குறைந்து 1,27,875 ஆக உள்ளது. புனேவில் 20 சதவீதம் குறைந்து 65,135 வீடுகள் விற்று உள்ளன. பெங்களூருவில் 5 சதவீதம் குறைந்து 62,205 வீடுகள் மட்டுமே விற்றுள்ளன. டெல்லி-என்சிஆரில் வீடு விற்பனை 8 சதவீதம் குறைந்து 57,220 ஆக உள்ளது. ஹைதராபாதில் மிக அதிக அளவில் வீடு விற்பனை குறைந்துள்ளது. அங்கு 23 சதவீதம் சரிவுடன் 44,885 வீடுகள் மட்டுமே விற்கப்பட்டுள்ளன. கொல்கத்தாவில் 12 சதவீத சரிவுடன் 16,125 வீடுகள் விற்றுள்ளன.
சென்னை வீடு விற்பனை
ஆனால், சென்னையில் மட்டும் எதிர்மறை நிலை உள்ளது. 2025ஆம் ஆண்டில் சென்னையில் வீடு விற்பனை 15 சதவீதம் உயர்ந்துள்ளது. மொத்தம் 22,180 வீடுகள் விற்பனையாகியுள்ளன. இது மற்ற நகரங்களை ஒப்பிடும்போது நல்ல முன்னேற்றமாக கருதப்படுகிறது. வீட்டுவிற்பனை குறைவதற்கான காரணங்களாக புவிசார் அரசியல் பதற்றங்கள், தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிக பணிநீக்கங்கள், வரி தொடர்பான பாதிப்புகள் மற்றும் பொருளாதார மந்த நிலை ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.
ஐடி பணிநீக்கம்
இவை அனைத்தும் வீடு வாங்கும் மனநிலையை பாதித்துள்ளதாக அனாரோக் நிறுவனம் கூறியுள்ளது. மொத்தத்தில், வீடு விற்பனை எண்ணிக்கை குறைந்திருந்தாலும், வீடு விலை உயர்வால் விற்பனை மதிப்பு அதிகரித்துள்ளது என்பது இந்த அறிக்கையின் முக்கிய அம்சமாகும். அடுத்த மாதங்கள் மற்றும் ஆண்டுகளில் சந்தை நிலை எப்படி இருக்கும் என்பதே ரியல் எஸ்டேட் துறையின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications