தினசரி கொரோனா பாதிப்பு அதிரடியாக குறைந்தது... மீளும் இந்தியா - அதிகரிக்கும் நம்பிக்கை
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து 5ஆவது நாளாக 2 லட்சத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கையால் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
சென்னை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,27,510 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 2,55,287 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18,95,520 ஆக குறைந்துள்ளது.
கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியாவை புரட்டிப் போட்டு விட்டது. தினசரி பாதிப்பு 4 லட்சத்திற்கும் மேல் பதிவாகி வந்தது. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். மயானங்கள் நிரம்பி வழிந்தன. எங்கும் குவியல் குவியலாக சடலங்கள் காணப்பட்டது.
இரண்டாம் அலையின் தொடக்கத்தில் மாநில அரசுகள் அனைத்தும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த திணறி விட்டனர். பல மாநிலங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கையால் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

1,27,510 பேருக்கு பாதிப்பு
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,27,510 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,81,75,044 பேராக அதிகரித்துள்ளது.

2,59,47,629 குணமடைந்தனர்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,55,287 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,59,47,629 பேராக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் 3,31,895 பேர் மரணம்
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு 2,795 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 3,31,895 பேராக அதிகரித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா பாதிக்கப்பட்டு தற்போது நாடு முழுவதும் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18,95,520 ஆக குறைந்துள்ளது. 21,60,46,638 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications