குடியுரிமை சட்டம்.. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தீர்வு காண வேண்டும்.. முஸ்லீம் லீக் தீர்மானம்
சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டம், என்.பி.ஆர்., என்.ஆர்.சி. தொடர்பாக தமிழக அரசு அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி தீர்வு காண வேண்டும் என இந்திய முஸ்லீம் லீக் மாநில நிர்வாகக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைமை நிர்வாகக் குழு அவசர கூட்டம் 14-03-2020 சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் சென்னை மண்ணடி காயிதே மில்லத் மன்ஸிலில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) 2019 தொடர்பாக பொது மக்களிடையே குறிப்பாக சிறுபான்மை சமூகத்தினரிடையே ஏற்பட்டிருக்கும் ஐயப்பாடுகளை கலையும் வகையில் இஸ்லாமிய சமுதாயத் தலைவர்களை நேரில் கலந்து ஆலோசிக்க 14-03-2020 மாலை 4 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அதில் பங்கேற்கும்படியும் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் அவர்கள் அழைப்பு அனுப்பியுள்ளார்கள்.
இந்த அழைப்பிற்கு நன்றி தெரிவித்து பதில் அனுப்பியுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள், "குடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ) மட்டுமின்றி தேசிய குடிமக்கள் பதிவேடு(என்ஆர்சி) மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்பிஆர்) ஆகியவையும் நாட்டு மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் மிகுந்த அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த அச்சமும், பயமும், குழப்பமும், தெளிவின்மையும் முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமே ஏற்பட்டிருப்பதாக கருதுவது நாட்டில் நிலவும் எதார்த்த நிலைமைக்கு முற்றிலும் மாறான எண்ணமாகும்.
இது அனைத்து மக்களின் தலையாய பிரச்சினை என்பதால், இதுபற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் முஸ்லிம் அமைப்புக்களின் தலைவர்கள் மட்டுமே பங்கேற்பது சரியாக அமையாது.
எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி தீர்வு காணவேண்டும்"" என குறிப்பிட்டுள்ளதை இக்கூட்டம் சுட்டிக்காட்டி அத்தகைய அனைத்துக்கட்சிக் கூட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்கள் உடனடியாக கூட்ட இக்கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது.
2. குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 மட்டுமே தமிழக அரசால் எடுத்துக் காட்டப்படுகிறது. ஆனால், தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவை மத்திய அரசின் வழிமுறைகள் மட்டுமே இவைகளுக்கு எதிராக நாட்டின் 14 மாநிலங்கள் தீர்மானங்களை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளன. அதேபோன்ற தீர்மானத்தை தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் நிறைவேற்றி மக்களின் அச்சத்தைப் போக்க தமிழ்நாடு அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
3. சிஏஏ, என்ஆர்சி, என்பிஆருக்கு எதிராக சட்ட ரீதியாகவும், ஜனநாயக முறையிலும், அமைதி வழியிலும் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், பேரணி மற்றும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இவைகளால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏதுமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்திலேயே தமிழ்நாடு அரசும் தெரிவித்துள்ளது. ஆகினும் இந்நிகழ்ச்சிகளில் ஈடுபட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்திருப்பது ஜனநாயக விரோதமானது என்பதை இக்கூட்டம் தெரிவித்துக் கொள்வதோடு, அந்த வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்து உத்தரவிட தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
4. சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகிய மத்திய அரசின் சட்டம் மற்றும் வழிமுறைகளை எதிர்த்து நாடு முழுவதிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், முஸ்லிம் சமுதாயம் மிகுந்த அச்ச உணர்வுக்கு ஆளாக்கப் பட்டுள்ளதால் பல்வேறு இடங்களில் தன்னெழுச்சிலான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இத்தகைய போராட்டங்களில் சமூக விரோதிகள் ஊடுருவி வன்முறை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கிடவோ, சமூக நல்லிணக்கம் பாதித்திடவோ எவ்விதத்திலும் இடமளித்து விடக்கூடாது என்பதில் முஸ்லிம் சமுதாயம் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு செயல்பட இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.