அச்சுறுத்தும் நிபா வைரஸ்.. தமிழகத்தில் அதிகாரிகளுக்குப் பறந்த உத்தரவு - அமைச்சர் மா.சுப்பிரமணியம்
சென்னை: மேற்கு வங்கத்தில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 5 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாட்டில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் நிபா வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து சுகாதார அலுவலர்களும் கண்காணிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நிபா வைரஸ் என்பது விலங்குகள் மூலம் பரவும் நோய்த் தொற்றாகும். பழங்களை உண்ணும் வௌவால்கள், குதிரைகள், நாய்கள் மற்றும் பன்றிகள் மூலம் இந்த வைரஸ் மனிதா்களுக்குப் பரவி வருகிறது. இதையடுத்து, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நிபா முன்னெச்சரிக்கை
இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது: நிபா வைரஸ் பரவல் தொடர்பாக எந்தெந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து துறையின் சார்பில் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சுகாதார அலுவலர்கள் கண்காணிப்போடு இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் பிஎம்ஓக்கள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர்கள் இதுதொடர்பாக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
விலங்குகள் மூலம் பரவும் நிபா
நிபா வைரஸ் குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: நிபா வைரஸ் என்பது விலங்குகள் மூலம் பரவும் ஒரு நோய் தொற்று. பழங்களை உண்ணும் வௌவால்கள், குதிரைகள், நாய்கள் மற்றும் பன்றிகள் மூலம் மனிதா்களுக்கு இது பரவுகிறது. வௌவாலின் உமிழ்நீா் படா்ந்த பழங்களை உண்ணுவதன் மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடா்பு கொள்வதன் மூலமாகவோ நோய் தொற்று பரவுகிறது.
அறிகுறிகள்
காய்ச்சல், தலைவலி, வாந்தி, குழப்பம், தூக்கமின்மை, மூச்சுதிணறல் அல்லது மயக்கம், வலிப்பு போன்றவை முக்கிய அறிகுறிகள். பாதிப்பு ஏற்பட்ட 6 முதல் 21 நாள்களுக்குள் அறிகுறிகள் தென்படும். குறிப்பாக மேற்கு வங்கத்தில் பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு பயணம் செய்த பிறகு அல்லது நோய்வாய்ப்பட்ட ஒருவரைத் தொடா்பு கொண்ட பிறகு, இதுபோன்ற அறிகுறிகள் யாரிடமாவது தோன்றினால், அவா்கள் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
கழுவப்படாத அல்லது கீழே விழுந்த பழங்களை சாப்பிடுவதை மக்கள் தவிா்க்க வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக சோப்பால் கைகளை கழுவ வேண்டும். பதநீா், கள்ளு போன்ற பானங்கள் அருந்துவதைத் தவிா்க்க வேண்டும்.
கண்காணிப்பு பணி
பராமரிப்பில்லாத தூா்வாரப்படாத கிணறுகளின் அருகே செல்லக்கூடாது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துத்துறை இயக்குநரகத்தால், மாவட்ட சுகாதார அலுவலா்களுக்கு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்கவும், எல்லையோர மாவட்டங்களை சிறப்பு கவனம் செலுத்தி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு அனைத்து விதமான நோய் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. எனவே, நிபா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications