பேரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல..இன்று புலிகள் தினம்.. நாட்டில் புலிகள் பாதுகாக்கப்படுகிறதா? விவரம்!
சென்னை: புலிகள். இந்த பெயரை கேட்டால் தானாகவே நமது உடல் கிலியுடன் கொஞ்சம் அதிகமாகவே சிலிர்த்துக் கொள்ளும். காட்டின் ராஜா சிங்கம் என்றால், காட்டின் இளவரசர் கண்டிப்பாக புலிதான். தனது தனித்துவமான தோற்றத்தாலும், கம்பீரமான நடையினாலும், அதிர வைக்கும் உறுமலினாலும் மனிதர்களுக்கு தொடர்ந்து ஆச்சரியத்தை எற்படுத்தி வருகின்றன இந்த காட்டின் காவலன்கள்.
தங்களது பேவரைட் உணவான மான்களை டிபனாகவும், காட்டெருமைகளை லன்ச் ஆகவும், முயல்களை ஸ்னாக்ஸ் ஆகவும் எடுத்துக் கொள்ளும் புலிகள், மனிதர்களையே கண்டாலே கூச்ச சுபாவம் கொண்டு தெறித்து ஓடும் என்பதே உண்மை.
25 லட்சம் கொடுத்தாச்சு.. ரூ 1 லட்சம் அபராதத்தை கொரோனா நிதியாக வழங்க விருப்பமில்லை- நடிகர் விஜய்
ஆனால் 'தான் உண்டு தனது வேலை உண்டு' என்று சமத்தாக இருக்கும் புலிகளை தேடிச் சென்று இடையூறு ஏற்படுத்துகிறான் மனிதன்.
புலிகள் பாதுகாப்பு மாநாடு
கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் வனங்களை அழித்து, புலி இனங்களை தொடர்ந்து அழித்து வந்தனர் கெடு கெட்ட மனிதர்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புலிகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வந்த நிலையில் சர்வதேச நாடுகள் அவசரம், அவசரமாக ஓன்று கூடி ரஷ்யாவில் 2010-ம் ஆண்டு புலிகள் பாதுகாப்பு குறித்து சிறப்பு மாநாட்டை நடத்தியதுடன், புலிகளை பாதுகாக்கவும், அதன் எண்ணிக்கையை உயர்த்தவும் உறுதிமொழி எடுத்து கையெழுத்திட்டன.
அழிவில் இருந்து மீட்பு
இந்த ஒப்பந்தத்தை நினைவுபடுத்தும் விதமாகவும், புலிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு எற்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 29-ம் தேதி சர்வதேச புலிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்பின்பு தான் புலிகளுக்கு சற்று நிம்மதி பிறந்தது. புலிகளை பாதுகாக்க பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்பட்ட வன சரணாலயங்கள் , புலிகளை வேட்டையாடுவதை தடுத்தல், வேட்டையாளர்களுக்கு அதிக பட்ச தண்டனை, புலிகள் பாதுகாப்பு குறித்த தொடர்ச்சியான விழிப்புணர்வு ஆகியவை காரணமாக இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளாக புலிகள் அழிவு பாதையில் இருந்து தடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் எத்தனை புலிகள்?
இன்றைய நிலவரப்படி நமது நாட்டில் 51 புலிகள் சரணாலயங்கள் உள்ளன. இந்தியாவின் தேசிய விலங்கான புலியை பாதுகாக்க தொடர்ச்சியான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2016-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு கணக்கெடுப்புபடி நாட்டில் 2967 புலிகள் இருக்கின்றன.
மத்திய பிரதேசம் முதலிடம்
2006-ம் ஆண்டில் 1,411 புலிகள் இருந்த நிலையில், 2014-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 2,226 புலிகளாக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை 2018-ம் ஆண்டில் 2967 புலிகளாக அதிகரித்து இருப்பது நமக்கு மிகவும் ஆறுதலை தருகிறது. புலிகள் அதிகம் வாழும் மாநிலங்களில் மத்திய பிரதேசம் முதலிடம் பிடித்து வருகிறது. இங்குள்ள வன பகுதிகளில் 526 புலிகள் வாழ்ந்து வருகின்றன.
கர்நாடகாவில் எத்தனை புலிகள்?
இதற்கு அடுத்த இடத்தை பிடித்திருக்கும் நமது அண்டை மாநிலமான கர்நாடகா, மத்திய பிரதேசத்துக்கு கடுமையான போட்டி கொடுத்து வருகிறது. புகழ்பெற்ற காடுகளை கொண்டிருக்கும் கர்நாடகாவில் 524 புலிகள் வசித்து வருகின்றன. புலிகள் வாழ்விடத்தில் நமது தமிழகம் 5-வது இடத்தில் அமர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 264 புலிகள் வசிக்கின்றன. இதற்கு முந்தைய இடத்தில் உள்ள உத்தராகண்ட் மாநிலத்தில் 442, மகாராஷ்டிராவில் 312 என்ற எண்ணிக்கையில் புலிகள் வசித்து வருகின்றன.
தமிழ்நாட்டின் நிலை என்ன?
தமிழ்நாட்டில் 2006-ம் ஆண்டில் 76 புலிகள் இருந்த நிலையில் இந்த எண்ணிக்கை 2010-ல் 163 ஆக உயர்ந்துள்ளது. 2014-ல் 229 புலிகள் இருந்த நிலையில் தற்போது 264 புலிகள் வாழ்ந்து வருகின்றன.
தமிழ்நாட்டில் களக்காடு-முண்டந்துறை முதலானதாகவும், மிகவும் பிரதானவுமான புலிகள் காப்பமாகும். இதற்கு அடுத்தபடியாக ஆனைமலை மற்றும் முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் இருக்கின்றன .
நமது கடமை
சமீபத்தில் மேகமலை-ஸ்ரீவில்லிபுத்துர் புலிகள் காப்பகத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சமீபத்தில் புலிகள்-மனிதர்கள் மோதல் அதிகரித்து வருகிறது கவலையை ஏற்படுத்துகிறது.கொலைகார மனிதர்களிடம் இருந்து புலிகளை காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு மட்டும் இல்லை.ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கிறது. இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் என நாம் பெருமையுடன் கூறுகிறோம். இந்த தேசிய விலங்கை பாதுகாப்பது நமது கடமை அல்லவா?