ரைட்டு.. எடப்பாடி பழனிசாமி தலைக்கு மேல் தொங்கும் கத்தி! கொடநாடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க திட்டம்?
சென்னை : ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தப்படும் என சசிகலா, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைகளின் பெயர்கள் அடிபடும் நிலையில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு பகுதியில் 2017 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடைப்பெற்றது.
இது தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு அனைவரும் தற்போது ஜாமினில் உள்ளனர். இந்த வழக்கு கடந்த ஐந்தாண்டு காலமாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தர்மயுத்தமா.. அது கர்ம யுத்தம்! 'அதை’ செய்திருந்தால் ஜெயலலிதா பிழைத்திருப்பார்! ஜெயக்குமார் பளீர்!
கொடநாடு கொலை வழக்கு
வழக்கினை மறுவிசாரணை செய்ய அப்போதைய மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா தனிப்படை காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இதற்காக மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி முதல் தற்போது வரை 316 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
பலரிடம் விசாரணை
குறிப்பாக குற்றம் சாட்டப்பட்ட 10 பேர், மேலும் வாகன விபத்தில் இறந்த கனகராஜன் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் மற்றும் கொடநாடு மேலாளர் நடராஜ், சசிகலா, சசிகலா உறவினர் விவேக், தற்கொலை செய்துகொண்ட கொடநாடு கணினி பொறியாளர் தினேஷின் தந்தை போஜன் உள்ளிட்ட பலரிடமும் இந்த விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வந்தது.
சிபிசிஐடி
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி தமிழக டிஜிபி, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். இதனால் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை 316 பேரிடம் சேகரிக்கப்பட்ட வாக்குமூலங்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட 1500 பக்க ஆவணங்கள் நீதிமன்றத்தில் நீதிபதி முருகன் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் சாட்சிகளிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்கள் மூலம் சிபிசிஐடி போலீசார் விரைவில் விசாரணையை துவக்க உள்ளனர்.
ஐஜி தேன்மொழி
இந்நிலையில், கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு போலீசார் கொடநாட்டில் ஆய்வு மேற்கொண்டு, கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொடநாட்டிற்கு சென்ற சிபிசிஐடி போலீசார் மேலாளர் நடராஜிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். தொடர்ந்து அங்கு பணிபுரியும் காசாளர் மற்றும் கணக்கீட்டாளர் ஆகியோரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தற்போது விசாரணை பொறுப்பை ஏற்றிருக்கும் ஐஜி தேன்மொழி இந்த வழக்கில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.
எடப்பாடிக்கு சிக்கல்
தற்போது விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில், மீண்டும் பலரிடம் விசாரிக்க சிபிசிஐடி தரப்பு தயாராகி வருகிறது. பணியாளர்கள், குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள், முன்னாள் காவல் அதிகாரிகள், அரசியல்வாதிகள், என இந்த பட்டியல் நீள்கிறது. அதிலும் குறிப்பாக சசிகலா, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைகளின் பெயர்கள் அடிபடும் நிலையில், பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. ஏற்கனவே கொடநாடு கொலை கொள்ளை சம்பவத்தை வைத்து ஓபிஎஸ் எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், இந்த தகவல் எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.