மனசே ஆறல.. கண்ணால பார்த்தேன்.. "யாரந்த முக்கிய நபர்".. ஆணையம் மறைக்கிறதா.. ஐபிஎஸ் திலகவதி நறுக்
ஆறுமுகசாமி அறிக்கை குறித்து ஐபிஎஸ் திலகவதி ஒரு சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்
சென்னை: ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், எந்த பெயரையும் வெளிப்படையாக குறிப்பிடவில்லையே ஏன்? ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை செய்ய விடாமல் தடுத்தது யார்? என்றெல்லாம் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி கேள்வி எழுப்பி உள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை நேற்று முன்தினம் சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது. ஜெயலலிதா சுய நினைவுடன் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை என்றும், மயக்கமடைந்த பிறகு, அனைத்து நிகழ்வுகளும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என்றும் அறிக்கை பகீரை கிளப்பிவிட்டுள்ளது.
இந்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையானது பல்வேறு விவாதங்களை கிளப்பி விட்டு வருகிறது.. அந்தவகையில் பல அரசியல் விமர்சகர்கள், தலைவர்கள் கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.. அந்தவகையில் ஐபிஎஸ் திலகவதி ஒரு பிரபல சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்..
அப்பல்லோவில் கண்ணாடி வழியாக பார்த்த எனது குடும்பம்.. ஜெயலலிதா செய்தது என்ன?.. சசிகலா பரபரப்பு
திலகவதி
அந்த நீண்ட நெடிய பேட்டியில் பல்வேறு விஷயங்களை விலாவரியாக சொல்லி உள்ளார்.. அதன் சுருக்கம்தான் இவை: "இவர்கள் தாக்கல் செய்திருக்கும் விசாரணையில், எங்கேயுமே யார் பெயரையும் கூட குறிப்பிடவில்லை.. பழைய காலத்தில் பெண்கள், புருஷன் பெயரை சொல்ல மாட்டார்களே அதுமாதிரி, யார் பெயரைகூட குறிப்பிடாமல் உள்ளது. "ஒரு பிரமுகர், ஒரு முக்கிய நபர், ஜெ.வுக்கு தேவைப்பட்ட ஒருவர்" என்று இப்படியாக சுற்றிவளைத்து விஷயங்களை சொல்லி உள்ளார்கள்.. நேரடியாக இன்னார்தான் என்று பெயரை சொல்லாமல் உள்ளது எனக்கு ஏமாற்றமாக இருக்கிறது.. எனக்கு இதை நினைத்தாலே மனசே ஆறல..
மனுஷி + ஆத்மா
ஒன்றரை கோடி உறுப்பினர்களை கொண்ட அதிமுகவில், அந்த கட்சிக்கு தாயாக, தெய்வமாக, கருதப்படுகிற ஆத்மா என்று போற்றப்படும் மனுஷி, கேட்பாரில்லாமல், சரியான மருத்துவ உதவி அவருக்கு தரப்படாமல், நகர்மையத்தில் உயிர் துறந்துள்ளார்.. இதை கேட்பதற்கு ஆளில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.. கிட்டத்தட்ட அந்த 75 நாட்களும், ஒட்டுமொத்த அரசாங்கமும், எல்லாரும் அப்பல்லோவில்தான் இருந்தாங்க.. ஆனால் சிசிடிவியை யார் எடுக்க சொன்னாங்க? ஏன் எடுக்க சொன்னாங்க? அதற்கு பிரதாப் ரெட்டி ஏன் கட்டுப்பட்டார்? இதையெல்லாம் கேட்டால் நமக்கு பதில் கிடையாது..
வைத்தியம்
முக்கிய நபர் சொன்னதால் நீக்கப்பட்டது என்கிறார்களே? அந்த முக்கிய நபர் யார்? அது ஏன் சொல்ல மாட்டேங்கறீங்க? கமிஷன் ஏன் பெயரை சொல்லவில்லை? கமிஷனுக்கு இதில் என்ன அச்சம் இருக்கிறது? என்னை மாதிரி சாமான்யர் மனதில் உள்ள கேள்வி என்னவென்றால், ஒரு முக்கிய தலைவருக்கு உடம்பு சரியில்லை என்றால் உடனடியாக வெளிநாட்டுக்கு அழைத்து சென்றுதான் சிகிச்சை அளிப்பார்கள்.. அன்னைக்கு புரட்சித்தலைவர் இப்படித்தான் அழைத்து கொண்டு போனார்கள்.. உடல் நலம் சரியாகி மீண்டும் ஆட்சிக்கு வந்ததை நாம் பார்த்தோம்.. சமீபத்தில் ரஜினிக்கும் சிங்கப்பூரில் வைத்தியம் பார்த்தார்கள்..
விஜயகாந்த்
அதேபோல, மக்களால் மிகவும் நேசிக்கப்படுகிற விஜயகாந்த்துக்கும் உடல்நலம் சரியில்லாதபோது, அவரது குடும்பம் வெளிநாட்டுக்குதான் அழைத்து சென்றார்.. அப்படி இருக்கும்போது, ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்த சமயம், ரிச்சர்ட் பீலே வருகிறார்.. வந்ததுமே "ஏர் ஆம்புலன்ஸை உடனே வரவழையுங்கள், வெளிநாட்டுக்கு போகலாம்.. நானும் ஏர் ஆம்புலன்ஸில் வருகிறேன்" என்கிறார்.. அவர் அந்த அளவுக்கு சொல்லியிருக்கிறாரே, ஏன் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லவில்லை?
பூரண சுகம்
நுரையீரலில் ஒருநாளைக்கு ஒரு லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டு கொண்டிருக்கிறது, இதயத்தின் நிலைமை சீராக இல்லை.. கட்டுப்பாடில்லாமல் நீரிழிவு கோளாறு உள்ளது.. சிறுநீரக தொற்று இருக்கிறது.. இத்தனை சிக்கலும் இருக்கும்போது, அப்பல்லோ பிரதாப் ரெட்டி, செய்தியாளர்களிடம், "ஜெயலலிதா பூரண நலத்துடன் இருக்கிறார்.. அவங்க நினைத்தால் இப்போதுகூட டிஸ்சார்ஜ் செய்து கூட்டிட்டு போகலாம்" என்றாரே? ஏன் இப்படி சொன்னார்? இதை யாராவது கேட்டாங்களா? இப்படி சொல்ல வேண்டிய நெருக்கடி பிரதாப் ரெட்டிக்கு வந்தது?
மதர் தெரசா
ஒரு கோடி ரூபாய்க்கு 10 இட்லி சாப்பிட்டவங்க, அவங்க கூடவே இருந்து "அக்கா அக்கா" என்ற உருகியவர்கள் யாருமே, 75 நாளும் இந்த சிகிச்சைதான் தரப்பட்டது என்று கேபினட்டுக்குகூட சொல்லவில்லை.. அந்தம்மா காலில் விழுந்தவர்களை நாம் பார்த்திருக்கிறோம்.. ஆனால் அந்தம்மா ஒருத்தர் காலில் விழுந்தார் என்றால், அது மதர் தெரசா காலில்தான்.. நான் என் கண்ணால பார்த்தேன்.. மதர் தெரசா எதற்காகவெல்லாம் அறியப்பட்டாரோ, அதையெல்லாம் போற்றுகிற ஒரு பண்பாளராகத்தான் ஜெயலலிதா திகழ்ந்தார்.. ஒருவேளை சசிகலாவின் தலையீடு எதுவும் இல்லாமல் ஆட்சியை நடத்தியிருந்தால் எந்த குற்றச்சாட்டும் அவர்மீது வந்திருக்காது
ஆஞ்சியோகிராம்
ஆஞ்சியோகிராம் என்பதில், 'கிராம்' என்ற வார்த்தைக்கு மருத்துவ துறையில் டெஸ்ட் என்று பெயர்.. இதயத்தில் அடைப்புகள் இருக்கிறதா? அப்படி இருந்தால் எங்கே இருக்கிறது? எத்தனை இருக்கிறது? என்பதை அறியும் டெஸ்ட்தான் இது.. ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்யப்பட்டபோது சொன்னது என்னவென்றால், காய்ச்சல் + டி-ஹைடிரேஷன் என்று மட்டும்தான் சொன்னார்கள்.. அப்பறம் ஜூரம் சரியாகிவிட்டது என்றார்கள்.. ஒருவாரம் கழித்துதான், உடல்நலத்தில் அவருக்கு என்ன பிரச்சனை என்றே தெரியவருகிறது.. நுரையீரலில் நீர் தங்குகிறது.. இதயத்தில் பிரச்சனை இருக்கலாம் என்பது சீரியஸான விஷயம்.. ரிச்சர்ட் பீலே, ஜமீன் ஷர்மா இருவருமே ஆஞ்சியோ செய்யலாம் என்றுதான் சொல்கிறார்கள்..
பிளாஸ்ட்டிரி
ஆஞ்சியோ செய்யலாம் என்று ரிச்சர்ட் பீலே சொன்னதற்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் சரியென்றே சொல்லி உள்ளார்.. ஆனால், இதற்குபிறகு, அப்பல்லோவின் மருத்துவ டீமின் தலைவர் பாபு ஆபிரகாம், ஆஞ்சியோ தேவையில்லை என்று ரிச்சர்ட் பீலே சொல்வதாக சொன்னார்.. ஆஞ்சியோ செய்யாமல் இருக்க மருத்துவ காரணங்கள் இருக்கலாம்.. அதை செய்யாமலேயே, நெருக்கடி இருந்தால் நேரடியாகவே ஆஞ்சியோ பிளாஸ்டிரி, பைபாஸ் போன்றவற்றை செய்யலாம்.. ஆனால், ஆரம்பத்தில் இருந்தே இதை தள்ளிப்போடவும், தவிர்க்கவும் என்ன காரணம்.. இதுதான் சந்தேகமாக இருக்கிறது" என்றெல்லாம் அந்த பேட்டியில் சொல்லி உள்ளார்.