தடதடக்க வைத்த தட்கல்.. புக்கிங் செய்ய தவித்த பயணிகள்!ஆக்சனில் இறங்கிய ஐஆர்சிடிசி.. இனி தொல்லையில்லை
சென்னை: பயணிகள் அவசர பயணங்களுக்காக ரயில்வேயில், தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு முறையை பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால் ஒரு சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்ததாக தகவல் வருவதாக பயணிகள் தொடர் புகார் அளித்தனர். இந்த நிலையில் போலி கணக்குகள் மூலம் பயணச் சீட்டுகள் முன்பதிவு செய்யப்படுவது தெரியவந்த நிலையில் சுமார் 2.0 கோடி ஐஆர்சிடிசி கணக்குகளை முடக்கி உள்ளது ரயில்வே.
இந்தியாவின் மிக முக்கிய துறை என்றால் அது ரயில்வே தான். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரயில்வே துறை, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டின் அனைத்து பயணிகளையும் இணைக்கிறது. ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கு ஆயிரக்கணக்கான ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன.
நாட்டிலேயே அதிக பணியாளர்களைக் கொண்ட துறையாக ரயில்வே இருக்கிறது. குறைந்த செலவில் பாதுகாப்பான பயணம் என்பதால் மக்களின் சிறந்த தேர்வாக ரயில்வே இருக்கிறது. பேசஞ்சர் ரயில்கள் மட்டும் இல்லாது எக்ஸ்பிரஸ் ரயில்கள், வந்தே பாரத், வந்தே பாரத் ஸ்லீப்பர் மின்சார ரயில்கள் ஆகியவையும் இந்தியா முழுமையும் இயக்கப்படுகிறது.

பல நாட்களுக்கு முன்பே ரயிலில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பம்சம். குறிப்பாக அவசர பயணங்களுக்கு தட்கல் டிக்கெட் முன்பதிவு என்பது பெரிய வரப்பிரசாதமாக இருக்கிறது. தற்போது அதிலும் குழப்பம் இருந்ததால் இந்த நடைமுறையை ரயில்வே ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இடைத் தரகர்கள் அதிக அளவில் டிக்கெட்டுகளை பிளாக் செய்ததால் உண்மையான பயணிகள் சிரமம் அடைய வேண்டி இருந்தது.
தற்போது அதற்கும் தீர்வு கண்டுள்ளது ரயில்வே. அதன்படி ஒரு ஐடி மூலம் ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டு தட்கல் டிக்கெட் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். அனைத்து வகை ரயில்களிலும் 30 சதவீத இருக்கைகள் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்காக ஒதுக்கப்படும். மேலும் கடந்த காலங்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு 11 மணிக்கு தொடங்கும் நிலையில், இன்று முதல் 10 மணிக்கு தொடங்கும் எனவும் ரயில்வே விதிமுறைகளில் மாற்றம் செய்திருக்கிறது.
இந்த நிலையில் புதிய ரயில்வே தட்கல் முன்பதிவு டிக்கெட் பெறும் முறையில் மாற்றங்களை அறிவித்தும் பயணிகள் தங்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என கூறினர். ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்கே தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய காத்திருந்தாலும் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேருக்கு இணையதளம் வேலை செய்யவில்லை என தகவல் வருகிறது. சில நிமிடங்களில் பயண சீட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாக காட்டியதால் ரயில் பயணிகள் சிரமமடைந்தனர்.
ஆனால் ஏஜென்ட்கள் மூலம் சென்றால் மட்டும் உடனடியாக பயண சீட்டுகள் கிடைப்பதாகவும், எப்படி தட்கல் நேரத்தில் இணையதளம் முடங்குகிறது, மெதுவாக செயல்படுகிறது உள்ளிட்டவை குறித்து மத்திய ரயில்வே அமைச்சகத்தை நோக்கி மக்கள் புகார்கள் தெரிவித்தனர். கடந்த 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் தக்கல் முன்பதிவு செய்தால் 90 சதவீதம் டிக்கெட் கிடைக்கும் என்ற நிலையில் தற்போது ஒரு சதவீதம் மட்டுமே டிக்கெட் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம், ஐஆர்சிடிசி நிர்வாகத்துடன் இணைந்து விசாரணை நடத்திய நிலையில் சுமார் 2.30 கோடி போலி கணக்குகள் கண்டறியப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் ஐஆர்சிடிசியின் சரிபார்ப்பை தவிர்ப்பதற்காக சூப்பர் தட்கல் போன்ற சட்ட விரோத மென்பொருட்களை பயன்படுத்தி 6800 டொமைன்கள் இருப்பதும் தெரியவந்தது.
இதை அடுத்து தேசிய சைபர் க்ரைம் போர்டலில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இரண்டரை கோடி போலி கணக்குகள் முடக்கப்பட்டு இருக்கிறது. மேலும் 20 லட்சம் கணக்குகளை மறு மதிப்பீடு செய்யவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த நடவடிக்கையின் மூலம் கடந்த மே 22ஆம் தேதி 10 மணிக்கு ஒரே நிமிடத்தில் 31 ஆயிரத்து 800 தட்கல் முன்பதிவு நடந்ததாக ஐஆர்சிடிசி கூறியுள்ளது. மேலும் போலி ஐடிகள், பாட்டுகள் ஆகியவற்றின் மூலம் டிக்கெட்டுகளை பெறுவதை தடுக்கும் வகையில் ஐஆர்சிடிசி இணையதளம் மேம்படுத்தப்படும் எனவும், தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகள் சரி செய்யப்படும் எனவும் ஐஆர்சிடிசி கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications