பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம்? ’மெகா கேள்விக்கு விடை என்ன?’- ஆட்டத்தை மொத்தமா மாற்றிய பாயிண்ட்!
சென்னை : அதிமுகவில் நிலவும் மோதல்களைத் தொடர்ந்து ஒரு பெரிய விவாதம் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினருக்கு இடையே நடந்தது. அது, பொதுக்குழுவுக்கு உச்சபட்ச அதிகாரம் இருக்கிறதா என்பதுதான். அந்தக் கேள்விக்கு இன்று ஐகோர்ட் அளித்துள்ள தீர்ப்பு பதிலாக அமைந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி தரப்பினர், பொதுக்குழுவே கட்சியின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பு, அதன் ஒப்புதல் பெற்றால் தான் ஒருங்கிணைப்பாளர் பதவி இருக்கும் என்ற வாதங்களை முன்வைத்து வந்தனர்.
ஆனால், ஓபிஎஸ் தரப்பு, தொண்டர்களே தலைமையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சிறப்பு விதியால், தலைமைப் பதவி தேர்வுக்கு பொதுக்குழு ஒப்புதல் தேவையில்லை என்று வாதாடியது.
பொதுக்குழுவை விட அதிமுகவின் அடிப்படைத் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் பதவியே அதிகாரம் மிக்கது என்றும், அதனை பொதுக்குழுவால் நீக்க முடியாது என்றும் ஓபிஎஸ் தரப்பு கூறி வந்தது.
மீண்டும் மீண்டுமா? 'ஜெயலலிதாவுக்கே இந்த நிலை!’ கோர்ட் தீர்ப்பு.. பறிபோன நிரந்தர பொதுச் செயலாளர் பதவி
பொதுக்குழு ஒப்புதல் பெறவில்லை
ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், டிசம்பர் 2021ல் கொண்டு வரப்பட்ட ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடர்பான திருத்தங்களுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்பதைக் காரணமாகச் சொல்லியே, ஒருங்கிணைப்பாளர்கள் பதவி இன்றி தலைமைக் கழகம் மூலம் மீண்டும் ஜூலை 11ல் பொதுக்குழுவைக் கூட்டி ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், பொதுக்குழுவிற்கு தன்னை நீக்கும் அதிகாரம் இல்லை என்றும், பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாவிட்டால் பதவி காலாவதியாகும் என்பது தவறானது என்றும் ஓபிஎஸ் தரப்பு கூறிவந்தது.
உட்கட்சி சட்ட விதிகள்
பொதுவாக அரசியல் கட்சிகளில் பொதுக்குழுவே சர்வ அதிகாரம் படைத்த அமைப்பாக இருக்கும். அதனால் தான், பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மையான ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பதால், பொதுக்குழுவைக் கூட்டி கட்சியைக் கைப்பற்றினார். ஆனால், அதிமுகவைப் பொறுத்தவரை சிறப்பு சட்ட பிரிவுகள் உள்ளன. அதன்படி அதிமுகவில் தொண்டர்களிடமே தலைமையைத் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட அதிகாரங்கள் உள்ளன. தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கே பொதுக்குழுவைத் தாண்டிய அதிகாரங்கள் உள்ளன என ஓபிஎஸ் தரப்பு வாதங்களை முன்வைத்து வந்தது.
சுப்ரீம் பவர் இல்லையா?
அதிமுக தொண்டர்கள் ஏகமனதாக தேர்வு செய்த பிறகும், அதற்கு பொதுக்குழு அங்கீகாரம் வேண்டும் என்றால், எம்ஜிஆரின் நோக்கமே அடிபட்டுப் போகிறது. பொதுக்குழுவில் இருக்கும் 2 ஆயிரத்துச் சொச்சம் உறுப்பினர்களும் கூட ஒட்டுமொத்த தொண்டர்கள் எனும் எண்ணிக்கைக்குள் தான் வருகிறார்கள். அவர்களும் சேர்ந்து ஏகமனதாக தேர்ந்தெடுத்தது தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள். அப்படி இருக்கும்போது, பொதுக்குழு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது அடிப்படையே அற்ற வாதம் என பாயிண்டை முன்வைத்தது ஓபிஎஸ் டீம்.
பெரிய கேள்வி
அதிமுக சட்ட விதிகள் தொடர்பாக இரு தரப்பினரும் முன்வைத்த பாயிண்டுகள், அதிமுக தொண்டர்கள், பொதுமக்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தின. இந்நிலையில் தான் ஆகஸ்ட் 17ஆம் தேதி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவான தீர்ப்பு வந்தது. அதை எதிர்த்து ஈபிஎஸ் மேல்முறையீடு செய்த நிலையில் இன்று ஈபிஎஸ்ஸுக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. இந்தத் தீர்ப்பில், பொதுக்குழுவே அதிகாரம் படைத்த அமைப்பு என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது இரு நீதிபதிகள் அமர்வு.
உச்சபட்ச அதிகாரம்
இன்றைய தீர்ப்பில், அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் உள்ள பொதுக்குழுவுக்குதான் உச்சபட்ச அதிகாரம் உள்ளது. இருவரும் இணைந்து எடுக்கும் முடிவுகளையும் பொதுக்குழுதான் ஒப்புதல் அளிக்கவேண்டும். பொதுக்குழுவுக்கு தலைமை நிலைய செயலாளர் அறிவிப்பு வெளியிட்டதில் தவறில்லை. 2460 பொதுக்குழு உறுப்பினர்கள் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்து 2539 உறுப்பினர்கள் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். எனவே, பொதுக்குழு செல்லும் எனத் தெரிவித்துள்ளனர் நீதிபதிகள்.
முக்கியமான பாயிண்ட்
கடந்த முறை விசாரணையின்போது தவறவிட்ட விஷயங்களை இந்த முறை மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடினார் எடப்பாடி பழனிசாமி. அதில் அவர்கள் தெரிவித்த ஒரு முக்கியமான பாயிண்ட், தொண்டர்களின் பிரதிநிதிகளாகவே பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றரைக் கோடி தொண்டர்களைப் பிரதிபலிக்கிறார்களா என்ற கேள்வி யூகத்தின் அடிப்படையிலானது என ஈபிஎஸ் தரப்பு வாதங்களை முன்வைத்தது.
தீர்மானித்த தீர்ப்பு
இந்த வாதங்கள் இந்த வழக்கில் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளன. ஒன்றரைக் கோடி தொண்டர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், தொண்டர்களின் பிரதிநிதிகள் தான் என்பதை உறுதி செய்திருக்கிறது ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பு. இதன் மூலம், பொதுக்குழுவே உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பு என நீதிமன்றம் நிறுவியுள்ளது.