பாஜக தலைமை கைக்கு போன ‘பந்து’.. யாருக்கு ஆதரவு? அண்ணாமலை முடிவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் எதிர்காலம்? ஆஹா!
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரு அணியினரும் வேட்பாளர்களைக் களமிறக்குவதால், பாஜக யாருக்கு ஆதரவு அளிக்கும் என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. இரட்டை இலை முடங்குமா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, பாஜகவின் ஆதரவைப் பெறுவதில் இரு தரப்புமே தீவிரம் காட்டி வருகின்றனர். இன்று இரு தரப்பினரும் அண்ணாமலையைச் சந்தித்து ஆதரவு கோருகின்றனர்.
பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன், அதிமுகவில் இரு அணிகள் போட்டியிடுவதால், பாஜகவின் இறுதி முடிவை அண்ணாமலை அறிவிப்பார் எனத் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தீவிரமாக இருக்கும் நிலையில் பாஜகவின் ஆதரவு யாருக்கு என்பதை இதுவரையில் உறுதிப்படுத்தாத நிலையே உள்ளது.
பாஜக இந்த இடைத்தேர்தலில் எந்த அணிக்கு ஆதரவு அளிக்கிறதோ, அந்த அணியையே பாஜக தலைமை அங்கீகரிப்பதாக கருதப்படும் என்பதால், பாஜகவின் முடிவு பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

அதிமுக - 2 வேட்பாளர்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி களமிறங்குகிறது. அதிமுகவைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி அணி தனியாகவும், ஓபிஎஸ் அணி தனியாகவும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமாகா போட்டியிடாமல் விலகிய நிலையில், அதிமுகவிலிருந்தே 2 வேட்பாளர்கள் களமிறங்க உள்ளனர். இதனால், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்காமல் முடங்கும் எனத் தெரிகிறது.

அதிமுக - பாஜக
இதற்கிடையே, பாஜகவும் 14 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், கடந்த உள்ளாட்சி தேர்தல் போல பாஜக இந்த இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுமோ என்ற கேள்வி எழுந்தது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் தனித்துப் போட்டியிட்டு ரிஸ்க் எடுக்க பாஜக விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. எனினும், அதிமுக கூட்டணி சார்பில் தமாகா நின்றால் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் காரணமாக இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டால் தாமரை சின்னத்தில் போட்டியிட வைக்கலாம் என கருதி வந்ததாக கூறப்படுகிறது.

இரு தரப்பும்
ஆனால், தற்போது அதிமுகவில் இருந்தே 2 பேர் களமிறங்க உள்ளதால், பாஜகவின் அந்த முயற்சி பலிக்காமல் போயுள்ளது. அதிமுகவில் ஓபிஎஸ் ஈபிஎஸ் இரு தரப்பும் இடைத்தேர்தலில் களமிறங்குகின்றன. அதேநேரத்தில், தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தற்போது இருப்பது ஓ.பன்னீர்செல்வம்தான். எனவே அவர் கடிதம் கொடுத்தால்தான் இரட்டை இலை கிடைக்கும் என்ற சூழ்நிலை உள்ளது.

சம்மதிக்காத ஈபிஎஸ்
இப்போதும், ஓ.பன்னீர்செல்வம் தன்னை ஒருங்கிணைப்பாளராக ஏற்றுக் கொண்டால், நான் இரட்டை இலை சின்னத்தில் ஈபிஎஸ் வேட்பாளரை நிறுத்த கடிதம் கொடுக்கிறேன். நான் வேட்பாளரையே நிறுத்தவில்லை என்ற முடிவில் தான் இருக்கிறார். ஓபிஎஸ் தரப்பு போட்டியிடுவதாக அறிவித்து விட்டாலும், பாஜக கேட்டால் விலகத் தயார் என்றே கூறி இருக்கிறார். இதன் மூலம் தான் பேச்சுவார்த்தைக்கு தயார் என்ற நிலைப்பாட்டிலேயே ஓபிஎஸ் இருக்கிறார். ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதிக்கவில்லை.

இரட்டை இலை பெற மூவ்
இந்திய தேர்தல் ஆணையத்தில், இரட்டை இலை சின்னம் கோரி எடப்பாடி பழனிசாமி அணியினர் விரைவில் முறையிட திட்டமிட்டுள்ளனர். இதேபோல ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் இரட்டை இலையைப் பெற அழுத்தம் கொடுக்க தேர்தல் ஆணையத்திற்குச் செல்லத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த இடைத்தேர்தலில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரில் பாஜகவின் ஆதரவு யாருக்கு என்பதன் மூலம் அதிமுக சிக்கலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது தெளிவாகத் தெரியவரும்.

தனித்தனியாக
ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் ஒன்றுசேர வேண்டும் என்பதே பாஜக தலைமையின் விருப்பமாக இருப்பதால் இந்த விஷயத்தில் என்ன நிலைப்பாட்டை பா.ஜ.க தலைமை எடுக்கும் என்பது தெளிவு படுத்தப்படாமலேயே உள்ளது. இந்நிலையில் இன்று மாலை எடப்பாடி அணியினரும், ஓபிஎஸ் அணியினரும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை தனித்தனியாகச் சந்தித்துப் பேசி, தங்களுக்கு ஆதரவு கோரவுள்ளனர்.

மில்லியன் டாலர் கேள்வி
இரு தரப்பும் ஆதரவு கேட்டால் பாஜக என்ன முடிவெடுக்கும் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. இந்த இடைத்தேர்தலில் பாஜக யாருக்கு ஆதரவு அளிக்கிறதோ அந்த தரப்பையே பாஜக தலைமை அங்கீகரிப்பதாக அர்த்தமாகும். இதனால், அண்ணாமலையின் முடிவு அரசியல் நோக்கர்களால் உற்றுநோக்கப்படுகிறது. பந்து இப்போது அண்ணாமலை கோர்ட்டுக்கு வந்திருப்பதால், அதிமுகவினர் பாஜகவின் நகர்வை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

இறுதி முடிவு அண்ணாமலை கையில்
இடைத்தேர்தலில் தாங்கள் போட்டியிடுவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளது பற்றி பாஜக பொதுச் செயலாளர் சீனிவாசன் பேசுகையில், அதிமுகவில் இரு அணிகள் போட்டியிடுவதால், பாஜகவின் இறுதி முடிவை அண்ணாமலை அறிவிப்பார், இடைத்தேர்தலில் திமுகவை தோற்கடிப்பதே எங்களின் லட்சியம் எனத் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக போட்டியிட்டால் ஆதரவு கொடுப்போம் என ஓபிஎஸ் கூறியதற்கு நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications