எகிறிய எடப்பாடி.. இன்றும் ஆப்சென்ட்.. தமிழக சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கலாகிறது
தமிழக சட்டசபை இன்று 3வது மற்றும் கடைசி நாள் கூட்டமாக நடக்க உள்ளது
சென்னை: இன்று 3வது மற்றும் கடைசிநாள் சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.. இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்..
தமிழக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் அதாவது 17ம் தேதி கூடியது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
அதேவேளை, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை. ஆனால், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கூட்டத்தொடரில் பங்கேற்றனர்.
எடப்பாடி போட்ட பிளான்.. குறுக்கே கட்டையைப் போட்ட காவல்துறை.. தடை மீறி நடத்த ஈபிஎஸ் திட்டம்?
அப்பாவு
எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அமர்ந்திருந்தார்... கூட்டத்தொடர் தொடங்கியதும் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள், இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத், தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் தீர்மானத்திற்கு பின், அன்றைய சட்டசபை கூட்டம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியை சேர்ந்த அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
சட்டசபை கூட்டம்
இந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ்ஸும் பங்கேற்றார். இந்த ஆய்வு கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது உள்பட பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, சட்டசபை கூட்டத்தொடர் அக்டோபர் 18,19 ஆகிய 2 நாட்களுக்கு கூட்டத்தொடர் நடைபெறும் என்று அப்போதே தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம், 2வது நாள் சட்டசபை கூட்டம் கூடியது.. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வந்திருந்தனர்.. ஆனால், எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி விவகாரம் குறித்து அவையில் கூச்சல் எழுப்பியதால், அவர்களை சபாநாயகர் வெளியேற்றி உத்தரவிட்டார்.
ஹிந்தி திணிப்பு
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தொடரில் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.. இந்த அறிக்கைகள் முழுமையாக எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.. மற்றொருபுறம் இந்தி திணிப்புக்கு எதிராக, அவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. இது பாஜகவுக்கு கடுப்பை தந்து வருகிறது.. அதனால், பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துவிட்டனர்..
செம எதிர்பார்ப்பு
இந்நிலையில், இன்று கடைசி நாள் கூட்டத்தொடர் கூடியுள்ளது.. இதில் பலரும் பங்கேற்றுள்ள நிலையில், சட்டசபையில் பேச அனுமதிக்காததை கண்டித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தனர்.. ஆனால், தடையை மீறி இந்த ஆர்ப்பாட்டத்தை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடத்தியதால், அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.. நேற்றைய தினம், அமளியில் ஈடுபட்டதால், எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களை பேரவையில் இருந்து வெளியேற்றியதுடன், நேற்று முழுவதும் பேரவையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இன்று அவர்கள் சட்டசபைக்கு வர சபாநாயகர் அனுமதி தந்திருந்தார்..
எடப்பாடி கைது
ஆனால், அவர்கள் அனைவரும் கைதாகி உள்ளதால், பேரவையில் பங்கேற்கவில்லை. அவர்களை தவிர மற்றவர்கள் அனைவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்ய உள்ளார்.. தற்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.. நேற்று முன்தினம் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டம் இன்றுடன் நிறைவு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.