ஓபிஎஸ் தனியாக நடத்திய மீட்டிங்.. சட்டென அதிகரித்த சப்போர்ட்.. என்ன நடக்கிறது இபிஎஸ் கேம்ப்பில்?
சென்னை: அதிமுக கட்சிக்குள் சசிகலா வருவது குறித்து கட்சி நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்று ஓ பன்னீர்செல்வம் கூறிய நாளில் இருந்து அவருக்கு கட்சிக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஆதரவு பெருகி வருகிறது.
அதிமுகவில் 2017க்கு பின்பாகவே கொஞ்சம் கொஞ்சமாக ஓ.பி.எஸ்ஸுக்கு இருந்த ஆதரவு சரிய தொடங்கியது. அதன்பின் எடப்பாடி பழனிசாமி முதல்வரான பின் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக அவரின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது. முக்கியமாக எடப்பாடி பழனிச்சாமி, அவரின் ஆதரவாளர்களுக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் முடிவுகள் எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது.
இரண்டாக உடைந்து இருந்த அதிமுக பின் ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் இடையே நடந்த சமாதான பேச்சுவார்த்தைக்கு பின் ஒன்றுபட்டது. அதேபோல் கட்சிக்குள் ஓ.பி.எஸ்ஸுக்கும் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி வழங்கப்பட்டது.
என்னதான் நினைக்கிறார் சசிகலா?.. க்ரீன் சிக்னல் காட்டிவிட்டதா டெல்லி மேலிடம்.. கொங்கிற்கு குறி!
ஓபிஎஸ் ஆதரவு
ஆனால் என்னதான் ஓ.பி.எஸ்ஸுக்கு ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டாலும் கூட அவர் பெரிதாக முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்டவராக இல்லை. அதிகாரபூர்வமாக அவருக்கு கட்சியில் முக்கிய முடிவு எடுக்கும் அதிகாரம் இருந்தாலும் கட்சி கூட்டங்களில் அவரின் கருத்துக்களுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தரப்படவில்லை. அதிமுகவின் சட்டசபை தேர்தல் கூட்டணி, வாக்குறுதி, எதிர்க்கட்சி தலைவர் தேர்வு, கொறடா தேர்வு என்று எதிலும் ஓ.பி.எஸ் குரலுக்கு மதிப்பு கொடுக்கப்படவில்லை.
மீட்டிங்
ஆனால் சசிகலாவிற்கு ஆதரவாக ஓ.பி.எஸ் பேசியதில் இருந்தே அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஆதரவு அதிகரித்து வருகிறது. முதலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக பேசினார். இதற்கு முன்பே ஒருமுறை சசிகலாவுக்கு ஆதரவாக செல்லூர் ராஜு பேசி இருந்தாலும்.. இந்த முறை வெளிப்படையாக ஓ.பி.எஸ்ஸை ஆதரித்து.. ஓ.பி.எஸ் சொல்வதில் என்ன தவறு என்று கேட்டார்.
நிர்வாகிகள்
அதன்பின் கட்சிக்குள் இருக்கும் மற்ற சில நிர்வாகிகளும் ஓ.பி.எஸ் கருத்துக்கும், சசிகலாவின் வருகைக்கும் ஆதரவாக பேசி வந்தனர். முத்தாய்ப்பாக ஆர். பி உதயகுமார் வெளிப்படையாக ஓ.பி.எஸ் உடன் நிற்க தொடங்கினார். அவர் வெளிப்படையாக எதுவும் பேசவில்லை என்றாலும் ஓ.பி.எஸ் பேட்டிகளில் எல்லாமே நம்பர் 2 வாக நின்றது ஆர்.பி உதயகுமார்தான். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
முதல்முறை இப்படி
இப்போது கூடுதல் ஆதரவாக திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் பாஸ்கரன் ஆகியோரும் ஓபிஎஸ் பக்கம் சாய தொடங்கி உள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. இதை முன்னிட்டே முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் பாஸ்கரன் ஆகிய முக்கிய தலைவர்களுடன் ஓ பன்னீர்செல்வம் மீட்டிங் நடத்தினார். எடப்பாடி மீது அதிருப்தியில் இருந்தவர்கள் இப்போது ஓ.பி.எஸ்ஸுக்கு வெளிப்படையாக சப்போர்ட் செய்ய தொடங்கி உள்ளனர் என்று கூறப்படுகிறது.
எடப்பாடி சைலன்ட்
முதல்முறையாக எடப்பாடி இல்லாமல் டாப் நிர்வாகிகள் சேர்ந்து இப்படி மீட்டிங் நடத்தி உள்ளனர். இதனால் அப்படியே எடப்பாடி பக்கம் இருந்த ஆதரவு ஓ.பி.எஸ் பக்கம் செல்கிறதோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன. கட்சிக்கு உள்ளே கொஞ்சம் கொஞ்சமாக காட்சிகள் மாறி வருகின்றன. அதிமுகவில் தற்போது கொங்கு மண்டல குரூப்பும் அமைதியாக இருக்கிறது.
கொங்கு மண்டலம் அமைதி
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஜெயக்குமார், சி வி சண்முகம் ஆகியோர் மட்டுமே பேசி வரும் நிலையில், மற்றவர்கள் யாரும் பெரிதாக பேசவில்லை. எடப்பாடியின் பிடி தளர்ந்து விட்டதோ என்ற கேள்வியை சமீபத்திய நிகழ்வுகள் எழுப்பி உள்ளனர். கொங்கு மண்டல அதிமுக தலைகளும் திடீரென அமைதியானதும் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் பவரை குறித்து உள்ளதோ என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
எப்படி?
ஓ.பி.எஸ்ஸின் திடீர் எழுச்சியை எடப்பாடி எப்படி எதிர்கொள்ள போகிறார்.. சசிகலா வருகையை எப்படி தடுக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தீபாவளிக்கு பின்தான் அதிமுகவில் உண்மையான பட்டாசு வெடிக்கும் அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன.