தப்பே இல்லீங்க.. சசிகலா பற்றி ஓபிஎஸ் சொன்னது கரெக்ட்".. அடடே.. முனுசாமி என்ன இப்படி சொல்றாரே?
சசிகலா குறித்து ஓபிஎஸ் சொன்னது தவறில்லை என்று முனுசாமி தெரிவித்துள்ளார்
சென்னை: அதிமுகவின் மூத்த தலைவர் கேபி முனுசாமி, சசிகலா - ஓபிஎஸ் குறித்து முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
தென் மண்டலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா, அடுத்தபடியாக, ஏப்ரல் 1-ம் தேதி கொங்கு மண்டலத்தை நோக்கி செல்கிறார்..
எடப்பாடி பழனிசாமியின் கோட்டை என கருதப்படும் கொங்கு மண்டலத்திற்குள் சசிகலா நுழைவதுடன், எடப்பாடியில் உள்ள கோயில் ஒன்றிலும் தரிசனம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

முனுசாமி
ஒருபக்கம் சசிகலா ஆதரவை திரட்ட, மறுபக்கம் அவரது முயற்சிகளை எடப்பாடி பழனிசாமி தடுத்து நிறுத்த, என அதிமுகவே படுபிஸியாக சென்று கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது அவரிடம் சசிகலாவின் கொங்கு மண்டல சுற்றுப்பயணம், அமைச்சர் ராஜகண்ணப்பனின் சர்ச்சை பேச்சு, திமுக மீதான அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு முனுசாமி சொன்ன பதில்கள்தான் இவை:

எடப்பாடி பழனிசாமி
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சசிகலா மீது தனிப்பட்ட மரியாதை இருப்பதாக தெரிவித்தது எந்த தவறும் இல்லை ஏனென்றால் 2001 ஆம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பன்னீர்செல்வத்தை அமைச்சர் ஆக்கினார்.. அப்போதிருந்து ஜெயலலிதா மறைவு முதல் பல்வேறு பொறுப்புகளில் பன்னீர்செல்வம் இருந்து வந்தார்... ஜெயலலிதாவுடன் சசிகலா உடன் இருந்த காரணத்தினால் அவர் மீது மரியாதை வைப்பது எந்த ஒரு தவறும் இல்லை.

ஓபிஎஸ் - எடப்பாடி
ஆனால் அரசியல் ரீதியாக சசிகலாவுக்கு மரியாதை கிடையாது. சசிகலாவை சந்தித்த அதிமுகவினர் கட்சியிலிருந்து நீக்கம் செய்வதில் முதல் கையெழுத்துப் போட்டவர் பன்னீர்செல்வம்தான்.. சசிகலாவை புறம்தள்ளி ஒதுக்கி விட்டோம்.. சசிகலா தன்னை பாதுகாத்துக்கொள்ள முன்னிலைப்படுத்திக் கொண்டு சுற்றுப்பயணம் செய்து வருகிறார்... முதல்வரின் துபாய் சுற்றுப்பயணம் பல்வேறு விமர்சனங்கள், முறைகேடுகள், குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

பாஜக
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆதாரங்களுடன் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அவரது குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்வர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.. பொது வாழ்வுக்கு வரும் தலைவர்கள், அமைச்சர்களுக்கு நாவடக்கம் மிக முக்கியம். ஒரு சமூகத்தைப் பற்றி விமர்சிக்க அரசியலமைப்பு சட்ட ரீதியாக எவருக்கும் உரிமை கிடையாது.,. அப்படி இருக்கும்போது திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் சமூக ரீதியாக அரசு அலுவலர்களை பேசி உள்ளார்.

திராவிட மாடல்
அவர் மீது முறைப்படி முதல்வர், அமைச்சரவையில் அவரை இருந்து நீக்கம் செய்து, இந்நேரம் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். திமுக அரசு அனைத்து மட்டங்களிலும் தோல்வி அடைந்து விட்டது... இதை மறைப்பதற்காக திராவிடன் மாடல் என்ற முகமூடியை தமிழக முதல்வர் ஸ்டாலின் அணிந்திருக்கிறார்... அந்த முகமூடியை கழற்றி வைத்துவிட்டு மக்களுக்கு அவர் சேவையாற்ற வேண்டும்" என்று முனுசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications