குமரி போகும் முதல்வர் ஸ்டாலின்.. ஆனால், ராகுல் காந்தியுடன் ‘ஸ்டேஜ் ஷேரிங் இல்லை’?
சென்னை : கன்னியாகுமரில் ராகுல் காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மேடையேறவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் காந்தியின் பாத யாத்திரையை மட்டும் முதல்வர் ஸ்டாலின், தேசியக்கொடியை வழங்கி தொடங்கி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரும் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தனது அகில இந்திய பாதயாத்திரையை தொடங்க இருக்கிறார் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி.
தமிழ்நாட்டில் மட்டும் 3 நாட்களுக்கு இந்த நடைபயணம் நடைபெற இருக்கிறது. இந்தப் பாதயாத்திரையில், கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்பார்கள் எனத் தகவல் வெளியானது.

தேர்தல் வியூகம்
2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. பாஜகவிற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளவும் காங்கிரஸ் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த மே மாத இறுதியில் உதய்பூரில் நடந்த காங்கிரஸ் சிந்தனை அமர்வு மாநாட்டில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அகில இந்திய யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, இந்த யாத்திரையை காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மேற்கொள்ள உள்ளார்.

குமரியில் தொடங்கி
நாடு முழுவதும் 150 நாட்கள் யாத்திரை நடத்தி மக்களைச் சந்திக்க இருக்கிறார் ராகுல் காந்தி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 3,750 கிலோ மீட்டர் தூரம் 150 நாட்களுக்கு பாத யாத்திரை மேற்கொள்ள உள்ள ராகுல்காந்தி அந்த பயணத்தை வரும் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்குகிறார். தமிழகத்தில் 4 நாட்களில் 59 கி.மீ பாத யாத்திரை செல்கிறார் ராகுல் காந்தி. மத்திய பாஜக அரசுக்கு எதிரான அலையை மக்களிடையே உருவாக்கும் நோக்கத்துடன் ராகுல்காந்தி இந்த பாத யாத்திரையை மேற்கொள்கிறார்.

ஸ்டாலினுடன்
பாத யாத்திரைக்காக வரும் 7ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வரும் ராகுல் காந்தி, முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்திக்க இருக்கிறார். அப்போது நாடாளுமன்ற தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், திமுக தலைவர் ஸ்டாலின் இடையேயான இந்த மீட்டிங் எதிர்பார்ப்புகளைக் கிளப்பி இருக்கிறது.

மேடையில் ஸ்டாலின் இல்லை?
மேலும், ராகுல் தொடங்கும் நடைபயணத்திலும், பொதுக்கூட்டத்திலும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் எனக் கூறப்பட்டது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினும் ராகுல் காந்தியுடன் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கமாட்டார் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தொடங்கி மட்டும் வைப்பார்
நடை பயண தொடக்க விழாவில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தியிடம் தேசியக் கொடியை வழங்கி பாத யாத்திரையை தொடங்கி வைப்பார் எனக் கூறப்படுகிறது. அதன்பிறகு, ராகுல் காந்தி பொதுக்கூட்ட மேடைக்கு நடந்து செல்வார். ஆனால், ஸ்டாலின் பொதுக்கூட்ட மேடைக்குச் செல்லமாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொண்டைப் பிரச்சனை
முதலில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் ஒப்புக்கொண்ட நிலையில், தலைமைக் கழகத்தில் இருந்து கே.எஸ்.அழகிரியை போனில் அழைத்த முக்கிய நிர்வாகி, தொண்டை அலர்ஜியால் கூட்டங்களில் பேசுவதை தவிர்க்குமாறு முதல்வருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதால், பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க மாட்டார், மற்றபடி பாதயாத்திரை நிச்சயம் தொடங்க வைக்க வருவார், ராகுலிடமும் எடுத்துச் சொல்லி விடுங்கள் எனத் தெரிவித்தாராம். இதுவே பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்காததற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

அழகிரி சொல்வது என்ன?
இதற்கிடையே இன்று சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, ராகுல் காந்தி பங்கேற்கும் பாதயாத்திரை நிகழ்ச்சியில் தோழமைக் கட்சிகளை புறக்கணிப்பதாக வரும் தகவல்களில் உண்மை இல்லை. முதலமைச்சர் ஸ்டாலின் தேசியக்கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைக்கிறார், மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் பாதயாத்திரையில் உடன் நடந்து செல்ல உள்ளனர் எனக் கூறியுள்ளார். பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பது பற்றி அழகிரி எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications