வாரிசுகள் எங்கே போவாங்க.. ஏன் பாஜகவில் இல்லையா? அதிமுக பேசலாமா? அமைச்சர் பொன்முடி விளாசல்
சென்னை: வாரிசு அரசியல் பற்றி பேசுவதற்கு ஜெயக்குமாருக்கோ.. சிவி சண்முகத்திற்கோ தகுதி இல்லை. வாரிசு அரசியல் என்பது பாஜகவில் இல்லையா? நம்மைப் பற்றி பேசுவதற்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்பதால் இப்படி பேசுகிறார்கள் என்று சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசினார்.
தமிழகத்தில் ஆளும் திமுக அரசு வாரிசு அரசியல் செய்வதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அதிலும் சமீபத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மகனும் திமுக இளைஞர் அணி செயலாளர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவான உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டது வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தை அதிகரிக்க வைத்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின்
அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. தன் மீது எழும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின், "இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டபோது, சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது எதிர்கொண்ட அதே விமர்சனக் கணைகளை, அமைச்சர் அறிவிப்பின்போதும் எதிர்கொள்கிறேன். 'விமர்சனங்களை என் செயலால் எதிர்கொள்வேன்' என்று அன்று பதிலளித்து இருந்தேன். அமைச்சர் பொறுப்பிலும் என் செயல்பாடுகள் மூலம் மக்களின் மனங்களை வெல்ல முயல்வேன்" எனக் கூறியிருந்தார்.

அமைச்சர் பொன்முடி பதிலடி
திமுக மீதான வாரிசு அரசியல் விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருக்கிறார். பேராசிரியர் க. அன்பழகனின் நூற்றாண்டு நினைவு விழா பொதுக்கூட்டம் சென்னை புரசைவாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

90 சதவீதம் பேர்
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பொன்முடி கூறியதாவது:- கட்சியில் அவரவர் இருக்கும் பொறுப்புகளிலே கட்சியை வளர்க்க வேண்டும், கொள்கைகளை வளர்க்க வேண்டும் என்பதற்கு எங்க அரசியல்வாதிகளின் வீட்டு பிள்ளைகள் எல்லாம் எங்கே போவார்கள். அவர்கள்தான் உண்மையில் கட்சியை வளர்ப்பார்கள். அதுவும் ஒரு 10 சதவீதம் தான் இருப்பார்கள். மீதம் 90 சதவீதம் பேர் அவர்களால் ஈர்க்கப்பட்டு.. இளைஞர்களால் கொண்டு வரப்பட்டு.. அவர்கள்தான் கட்சியினுடைய முதுகெலும்பாக இருப்பதுதான் வரலாறு. இதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.

ஜெயக்குமாருக்கோ.. சிவி சண்முகத்திற்கோ
அதிமுகவில் வாரிசு அரசியல் இல்லையா? சேகர் பாபு இருக்கிறார். என்னை விட அவருக்கு தெளிவாக தெரியும். வாரிசு அரசியல் பற்றி பேசுவதற்கு ஜெயக்குமாருக்கோ.. சிவி சண்முகத்திற்கோ தகுதி இல்லை. அரசியலில் வாரிசுகள் என்பது அவர்கள் கொள்கை ரீதியாக வளர்வது என்பது இயற்கை. இப்போது பாஜகவில் இல்லையா? நம்மைப் பற்றி பேசுவதற்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்பதால் இப்படி பேசுகிறார்கள்.












Click it and Unblock the Notifications