"நள்ளிரவு மீட்டிங்".. நாளை அமித்ஷாவை சந்திக்கும் எடப்பாடி? இறுதியாகும் அதிமுக - பாஜக கூட்டணி
சென்னை: தமிழகத்தில் மீண்டும் பாஜக - அதிமுக கூட்டணி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்படுகிறார் என்ற பரபரப்பான தகவல்கள் பரவி வருகிறது. இதற்கிடையே தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழ்நாடு வருகிறார். பாஜகவின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் நிலையில் நாளை இரவு எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுக தலைவர்கள் அமித்ஷாவை சென்னையில் வைத்து சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது அதிமுகவும், பாஜகவும் கூட்டணியாக போட்டியிட்டன. சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதன்பிறகு கடந்த 2022ம் ஆண்டில் இந்த கூட்டணி முறிந்தது. நகர்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தல் உள்ளிட்டவற்றில் பாஜகவும், அதிமுகவும் வெவ்வேறு கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அந்த தேர்தல்களிலும் திமுக கூட்டணி கட்சிகள் தான் அமோக வெற்றி பெற்றன.

இது அதிமுக, பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட தொடங்கின. இதற்கிடையே தான் திடீரென்று கடந்த மாதம் 25ம் தேதி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் சந்தித்து பேசினர்.
இந்த பேச்சுவார்த்தை என்பது தமிழகத்தில் மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி அமைப்பதற்கான தொடக்கப்புள்ளியாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் கூட இந்த சந்திப்பு என்பது கூட்டணிக்கான அச்சாரமா? என்பது பற்றி எடப்பாடி பழனிச்சாமி வெளிப்படையாக பதிலளிக்க மறுத்துவிட்டார். மக்கள் பிரச்சனைகளுக்காக அமித்ஷாவை சந்தித்ததாக அவர் கூறினார். ஆனாலும் கூட இனி ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று கூறி எடப்பாடி பழனிச்சாமியின் இந்த சந்திப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
இதற்கிடையே தான் பாஜக - அதிமுக கூட்டணி தமிழகத்தில் அமையும் என்பதையும் உறுதியாகி உள்ளது. அதாவது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே மோதல் என்பது உள்ளது. இப்படியான சூழலில் தான் பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விடுவிக்கப்படுகிறார். கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அமித்ஷாவிடம் கூறியதால் பாஜக மேலிடம் இந்த நடவடிக்கையை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் அதிமுக - பாஜக கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் மாநில தலைவர் அண்ணாமலையை நீக்க தமிழக பாஜகவினர் இடையே பெரும்பாலோனார் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது பாஜக மேலிடத்துக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் அதுபற்றி விரிவாக கட்சி நிர்வாகிகளுடன் விவாதிக்க வேண்டும் என்தற்காக அமித்ஷா 2 நாள் பயணமாக நாளை தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து நாளை இரவு சுமார் 7.30 மணிக்கு விமானத்தில் புறப்படும் அமித்ஷா இரவு 10.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அதன்பிறகு அவர் சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தங்க உள்ளார்.
பிறகு நாளை மறுநாள் அமித்ஷா அந்த ஹோட்டலில் வைத்து பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அதன்பிறகு நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்படுகிறார். இதற்கிடையே தான் தற்போது ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சென்னை வரும் அமித்ஷாவை அதிமுக தலைவர்கள் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி நாளை இரவில் சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தங்கும் அமித்ஷாவை நள்ளிரவில் மூத்த அதிமுக தலைவர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க திட்டம் வகுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சந்திப்பின்போது அதிமுக - பாஜக கூட்டணி பற்றி இருதரப்பும் விவாதிக்க உள்ளதாகவும், அதன்பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மாற்றிய பிறகு கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications