புகுந்தவீடு செல்லும் மணப்பெண்போல் செல்கிறேன்: உச்சநீதிமன்றம் செல்லும் நீதிபதி சுந்தரேஷ் பேச்சு!
சென்னை: பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீடு செல்லும் மணப்பெண்ணைப் போல டெல்லி செல்வதை உணர்வதாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் கூறினார்.
இதுவரை லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பளித்திருந்தாலும், மனசாட்சிக்கு எதிராக ஒரு தீர்ப்பு கூட வழங்கியதில்லை என்றும் அவர் பெருமையுடன் அவர் தெரிவித்தார்.

வழியனுப்பு விழா
சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் மூத்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் சார்பில் வழியனுப்பு விழா நடத்தப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி உள்ளிட்ட நீதிபதிகள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

புகழாரம் சூட்டினார்
இந்த விழாவில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் பிரிவு உபச்சார உரை நிகழ்த்தினார். ''24 ஆண்டுகளாக வழக்கறிஞராகவும், 12 ஆண்டுகள் நீதிபதியாகவும் நீதிபதி சுந்தரேஷ் பணியாற்றியுள்ளார் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 563 க்கும் வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார்'' என்று அவர் புகழாரம் சூட்டினார்.
இதனை தொடர்ந்து உரையாற்றிய நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் கூறியதாவது:-

மணப்பெண்ணைப் போல...
பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீடு செல்லும் மணப்பெண்ணைப் போல, பள்ளி படிப்பை முடித்து மேல் படிப்புக்கு செல்லும் மாணவனைப் போல டெல்லி செல்வதை உணர்கிறேன். பிரிவு எப்போதும் சிக்கலானது தான் என்றாலும் வாழ்க்கை முன்னோக்கி செல்ல வேண்டும். நான் இதுவரை லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பளித்திருந்தாலும், மனசாட்சிக்கு எதிராக ஒரு தீர்ப்பு வழங்கியதில்லை. அனைவரையும் கண்ணியத்துடன் நடத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி சுந்தரேஷ் கூறினார்.

யார் இந்த சுந்தரேஷ்?
ஈரோட்டை சேர்ந்த எம்.எம்.சுந்தரேஷ், 1985-ம் ஆண்டு வழக்கறிஞராக பணியாற்ற தொடங்கினார். ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.சிவசுப்ரமணியத்திடம் ஜூனியராக பணியாற்றினார். 2009-ம் ஆண்டு 47 வயதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக எம்.எம்.சுந்தரேஷ் நியமிக்கப்பட்டார். தற்போது சுமார் 12 கழித்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவரது தந்தை வி.கே.முத்துசாமியும் மூத்த வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

காலியிடங்கள் அதிகரிப்பு
நீதிபதி சுந்தரேஷ் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதால், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 56 ஆக குறைகிறது. மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 75 என்ற நிலையில் காலியிடங்கள் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications