சாட்டை எடுத்த தலைவர் ஸ்டாலின்..திமுகவில் தயாரான லிஸ்ட்.. இதுதான் கடைசி வார்னிங் இல்லையேல் பதவி காலி
சென்னை : கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற திமுகவினர் பதவி விலக திமுக தலைமை கொடுத்த காலக்கெடு நிறைவடைந்துள்ள நிலையில், கூட்டணி தர்மத்தை மீறி பதவி பெற்றவர்கள் குறித்த பட்டியல் திமுக தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
நகராட்சித் தலைவர் பேரூராட்சித் தலைவர் நகராட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை தங்களின் கூட்டணிக் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு திமுக தலைமை ஒதுக்கியது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலின் போது கட்சித்தலைமை அறிவிப்பை மீறி ஏராளமான இடங்களில் திமுகவினர், கூட்டணி கட்சிகளுக்கு எதிராக போட்டியிட்டு தலைவர் துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை கைப்பற்றினர்.

கூட்டணியில் குழப்பம்
கூட்டணி தர்மத்தை மீறி திமுகவினர் செயல்படுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இதே போல பல சம்பவங்கள் நடைபெற்றது. இந்நிலையில் தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கழக தலைமை அறிவித்ததை மீறி போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும் என திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.

தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை
கழகத் தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால், நான் குறுகி நிற்கிறேன். எந்தத் தோழமை உணர்வு நமக்கு மக்கள் மனதில் நல்லெண்ணம் உருவாக்கியதோ அந்த தோழமை உணர்வை எந்தக் காலத்திலும் உருக்குலைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். கழகத் தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று கழகத் தலைவர் என்ற முறையில் எச்சரிக்கிறேன் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிக்கையில் கூறியிருந்தார்.

திமுகவின் ராஜினாமா
இதற்கு கூட்டணிக் கட்சிகள் வரவேற்பு தெரிவித்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுகவினர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்தனர். இதனையடுத்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர்மன்ற துணைத்தலைவர் பாண்டியன் திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவர் கல்பனா உள்ளிட்டோர் பதவியை ராஜினாமா செய்தனர்.

அதிரடி நடவடிக்கை
கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற திமுகவினர் பதவி விலக திமுக தலைமை கொடுத்த காலக்கெடு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், கூட்டணி தர்மத்தை மீறி பதவி பெற்றவர்கள் குறித்த பட்டியல் ஒன்றியங்கள் வாரியாக தயாரிக்கப்பட்டு, மாவட்ட செயலாளர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை ஆராய்ந்த திமுக மாவட்ட செயலாளர்கள் அதனை திமுக தலைமைக்கும் அனுப்பி வைத்துள்ளனர். அவர்களை அனைவரும் மாவட்ட செயலாளர்கள் நேரில் அழைத்து பேசி பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என அறிவுறுத்த வேண்டும் எனவும், இல்லையேல் தலைமைக்கு தெரிவித்து கவுன்சிலர்களைக் கொண்டு நம்பிக்கை இல்லா தீர்மானம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாக திமுக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications