மதிக்கவே மாட்றாங்களேணே..மாஜிக்களிடம் புலம்பிய எடப்பாடி? படக்கென மாறிய ரூட்! பதற்றத்தில் பாஜக தலைகள்!
சென்னை : எம்எல்ஏக்கள் செல்வாக்கு, 90 சதவீத கட்சி நிர்வாகிகளின் ஆதரவு என இருந்தும் தன்னையும் ஓபிஎஸ்யும் பாஜக ஒரே தட்டில் எடை போடுவதை விரும்பாத எடப்பாடி பழனிச்சாமி கூட்டணிக்கு பாஜக ஒத்துவரவில்லை என்றால் தனித்துப் போட்டியிட முடிவு செய்திருப்பதாக கூறுகின்றனர் சேலம் ரத்தத்தின் ரத்தங்கள்.
"ஒண்ணா இருக்க கத்துக்கணும் ஒரு உண்மையை சொன்னா ஒத்துக்கணும்" ஒரு பழைய பாடலை அதிமுக தொண்டர்கள் நாள்தோறும் பாடி வருகின்றனர். ஆனால் அதனை எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வம் காது கொடுத்து கேட்பதாக தெரியவில்லை.
தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உட்கட்சி விவகாரங்களால் அதனை சரி செய்ய நேரம் போதாமல் சுழன்று கொண்டிருக்கும் நிலையில் பாஜக தாங்கள் தான் பிரதான எதிர்க்கட்சி என அரசியல் செய்து வருகிறது

அதிமுக மோதல்
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நீட் தேர்வு, பால் விலை உயர்வு, மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பு என திமுக தீவிர அரசியல் செய்தது. தற்போதும் அதே பிரச்சினைகள் இருந்தாலும் அதில் கவனம் செலுத்த முடியாத அதிமுக, பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற முயன்றவரும் இரு தலைவர்களால் முடங்கி கிடக்கிறது. அடுத்தடுத்து பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடி வருகைக்கு பிறகான நிகழ்வுகள் கூடுதல் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.

பாஜக ப்ளான்
இந்தியா முழுவதும் வெற்றிக்கொடி நாட்டினாலும் ஒவ்வொரு தேர்தலிலும் தமிழகத்தில் மட்டும் பாஜக பலத்த அடி வாங்குவது அனைவரும் அறிந்தது. பிரதமர் மோடி முதல் உள்ளூர் தலைவர்கள் வரை வார்டு வார்டாக சென்று வாக்கு கேட்டாலும் ஒரு எம்பி தொகுதியை பெறுவதே எட்டாக்கனியாக இருக்கிறது. இதனால் ஏதாவது ஒரு பிரதான கட்சியுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே ஒன்றிரண்டு எம்பிக்களை பெற முடியும் என பாஜக விரும்புகிறது. தற்போதைய சூழலில் அதிமுக பாமக உள்ளிட்ட கட்சிகள் தான் பாஜகவுடன் கூட்டணி சேரும் நிலை இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
இதனால் அவர்களை வைத்து நாடாளுமன்றத் தேர்தலை கடத்திவிடலாம் என தமிழக பாஜக விரும்பும் நிலையில் அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் அவர்களுக்கும் சிக்கலாகவே இருக்கிறது. இதனால் எடப்பாடி ஓபிஎஸ் தரப்பு இணைய வேண்டும் என பாஜக விரும்புகிறது. பிரதமர் மோடி தமிழகம் வந்த போது இருவரும் ஒன்றாக வரவேண்டும் என ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவிட்டதாகவும் இதனால் இருவரும் ஒன்றாகவே பிரதமர் மோடியை வரவேற்றதாக கூறுகின்றனர்.

கடும் அதிருப்தி
அதே நேரத்தில் முன்னாள் அமைச்சர்கள் 60-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 90% நிர்வாகிகள் தொண்டர்கள் ஆதரவு என தமிழகம் முழுவதும் தன்னை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக ஏற்றுக் கொண்ட நிலையில் ஒரே ஒரு எம்பி, 3 - 4 எம்எல்ஏக்கள், ஒரு சில மாவட்ட செயலாளர்களை வைத்துக் கொண்டிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தையும் தன்னையும் ஒரே தட்டில் பாஜக எடை போடுவதாக கருதுகிறார் எடப்பாடி பழனிச்சாமி. மேலும் ஓபிஎஸ்க்கு அறிவுரை கூறாமல் தன்னை இணக்கமாக செல்ல வேண்டும் என பாஜக வலியுறுத்துவதையும் அவர் விரும்பவில்லை.

தனித்துப் போட்டி
இதனால் பாஜக தனித்து போட்டியிட முடியுமா என மறைமுகமாக முன்னாள் அமைச்சர்கள் விமர்சித்து வரும் நிலையில் தனது தலைமையிலான கூட்டணியை பாஜக ஏற்றுக் கொண்டாலும் கட்சிக்கும் தன்னையே தலைமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் அப்படி இருந்தால் மட்டும்தான் பாஜகவுடன் கூட்டணி அல்லது நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தவிர்த்து பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கலாம் என நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாகவும் அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த பாஜக தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications