பின்லாந்துக்கு பறக்கும் அமைச்சர் மனோ தங்கராஜ்! என்ன விஷயமாக போகிறார் தெரியுமா?
சென்னை: தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அரசு முறை பயணமாக பின்லாந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.
அங்கு 2 நாட்கள் நடைபெறும் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் கலந்துகொள்ளும் அவர் தமிழகத்திற்கு ஐடி நிறுவன முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முக்கியப் பிரமுகர்களை சந்திக்கிறார்.
ஏற்கனவே ரோம், லண்டன், என இரண்டு நாடுகளுக்கு சென்றிருக்கும் இவர் தற்போது மூன்றாவது நாடாக பின்லாந்துக்கு சென்றிருக்கிறார்.

அமைச்சர் மனோ தங்கராஜ்
தமிழக தகவல்தொழில் நுட்பத் துறை அமைச்சராக பொறுப்பேற்றது முதல், தனது துறை ரீதியிலான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் மனோ தங்கராஜ் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த மாநாடுகள், முதலீடுகளை ஈர்க்கும் நிகழ்ச்சிகள் என எதுவாகினும் அனைத்திலும் ஆர்வமுடன் அதிகாரிகளுடன் சென்று பங்கேற்கிறார். அந்த வகையில் தற்போது SLUSH 2022 என்ற ஐடி துறை சார்ந்த உலகளாவிய மாநாட்டில் பங்கேற்பதற்காக இப்போது பின்லாந்து சென்றிருக்கிறார்.

2 நாள் மாநாடு
SLUSH 2022 மாநாட்டில் 2,000க்கும் மேற்பட்ட ஐடி நிறுவன அதிபர்கள் உலகம் முழுவதும் இருந்தும் பங்கேற்கிறார்கள். அவர்கள் மத்தியில் உரையாற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தமிழகத்தில் புதிய புதிய நிறுவனங்களை தொடங்குவதற்கு அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் ஏற்கனவே தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு உள்ள கட்டமைப்பு பற்றியும் அவர் உரையாற்றுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடு பயணம்
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பொறுப்பேற்றது முதல் டெல்லி, திருவனந்தபுரம், ஹைதராபாத், என இந்தியாவின் முக்கிய நகரங்கள் பலமுறையும் மற்றும் லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு ஓரிரு முறையும் மனோ தங்கராஜ் சென்று வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சருடன் தகவல் தொழில்நுட்பத் துறை உயர் அதிகாரிகள் குழுவும் பயணித்துள்ளது.

பள்ளிக் கல்விக்கு
பின்லாந்தை பொறுத்தவரை பள்ளிக்கல்விக்கு உலக நாடுகளுக்கு முன் மாதிரியாக திகழும் நாடு என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் அங்கு பணியாற்றி வருவது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications