நேரம் நெருங்க நெருங்க ப்ரஷர் கூட்டும் ஓபிஎஸ், ஈபிஎஸ்.. ‘எல்லாம் அவர் கையில்..’ கைகாட்டிய தமிழக பாஜக!
சென்னை : சென்னை வரும் பிரதமர் மோடியைச் சந்தித்தே ஆக வேண்டும் என எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் உறுதி பூண்டு தமிழக பாஜகவிற்கும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். தமிழக பாஜகவினர் கடைசியாக மோடியையே கைகாட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனித்தனியாக டெல்லி சென்றும், ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவராலும் பிரதமர் மோடியை தனியாகச் சந்தித்துப் பேச முடியவில்லை. தொடர் அலுவல்கள், நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் பிரதமர் மோடியால் இந்தச் சந்திப்புக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்காக சென்னை வரும் பிரதமர் மோடி ராஜ் பவனில் இன்று இரவு தங்க உள்ளார். அவரை தனித்தனியாக சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு தொடர்ந்து பாஜகவினருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர் ஈபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும்.

சென்னையில் பிரதமர் மோடி
சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்கவிழா மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு அதகளமாகச் செய்துள்ளது. இந்த விழாவில் பங்கேற்று போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறார்.

மோடியின் திட்டம்
இன்று மாலை 4.45 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைவார் பிரதமர் மோடி. சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் அடையாறு ஹெலிபேட் தளத்திற்குச் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கை சென்றடைவார். செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவுக்குப் பிறகு, அவர் சாலை வழியாக ராஜ் பவனுக்குச் சென்று அங்கு இன்று இரவு தங்குகிறார். அங்கு இரவு நேரத்தில், பாஜக தலைவர்கள் உள்ளிட்டோரை சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அப்போது அதிமுக தலைவர்களும் பிரதமரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர்.

பிரதமரை சந்திக்க நேரம்
பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசுவதற்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக நேரம் கேட்டுள்ளனர். பிரதமர் மோடியைச் சந்தித்து, அதிமுக பிரச்சனை பற்றி பேச ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவருமே தயாராகி வருகின்றனர். கட்சியில் தனக்கு இருக்கும் ஆதரவையும், செல்வாக்கையும் பிரதமர் மோடிக்குப் புரியவைத்து, மேலிட ஆதரவை தன் பக்கம் திருப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதேநேரம், இருவரும் இணைந்து செயல்பட உதவுமாறு ஓபிஎஸ் பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவார் எனக் கூறப்படுகிறது.

சந்திப்பாரா?
ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி வரை கடுமையாக காய் நகர்த்தி வந்தாலும், பிரதமர் தரப்பிலிருந்து இதுவரை எந்த உறுதியான பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் நேரம் இல்லை, சந்திக்க முடியாது என்றும் பிரதமர் மோடி தரப்பு கூறவில்லை. இதனால், கடைசி நேரத்தில் எப்படியும் நம்மை அழைத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையோடு விடாமல் முயற்சித்து வருகின்றனராம் ஓபிஎஸ், ஈபிஎஸ்.

கடும் அழுத்தம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரிடமும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பில் இருந்து பேசி வருகின்றனர். அவர்கள் நிச்சயம் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வோம் எனக் கூறி வந்துள்ளனர். பிரதமர் சந்திப்பாரா மாட்டாரா என்பது தொடர்பாக தகவல்கள் மாறி மாறி அலையடிப்பதால், தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர்.
Recommended Video

கை காட்டும் தமிழக பாஜக
இதையடுத்து, பிரதமர் காதில் போட்டுவிட்டோம், நெருக்கமானவர்களிடம் பல முறை சொல்லியாகிவிட்டது. மீண்டும் நாங்கள் சந்திக்கும்போதும் நினைவூட்டுவோம். சென்னை வருவதால் சந்திப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. இனி எல்லாம் மோடி கையில் தான் உள்ளது. அவர் விரும்பினால் கண்டிப்பாக சந்திப்பார் என தமிழக பாஜகவினர் மோடியை கைகாட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இருவரையும்
பிரதமர் மோடி ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரில் ஒருவரைச் சந்தித்தால், நிச்சயமாக பாஜக தலைமையின் ஆதரவு அவருக்கே இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம். இருவரையும் சந்தித்தால், அதிமுகவில் இணக்கமாகச் செல்வது குறித்துப் பேசப்பட வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். ஒருவேளை இன்றும் இருவரையும் பிரதமர் மோடி சந்திக்காவிட்டால், அதிமுக பூசலால் பிரதமர் கோபமடைந்திருப்பதே அதற்கு காரணமாக இருக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications