நல்லாட்சிக்கான முதல்படி.. தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு பாராட்டுக்கள்.. ஜக்கி வாசுதேவ் டிவிட்!
சென்னை: தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையை பாராட்டி ஜக்கி வாசுதேவ் டிவிட் செய்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களை விடுவிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வந்தவர் ஈஷா அமைப்பை சேர்ந்த ஜக்கி வாசுதேவ். தமிழக கோவில்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை என்று இவர் குற்றஞ்சாட்டி வந்தார்.
இதற்காக தமிழக கோவில்களை விடுவிப்போம் என்ற பிரச்சாரத்தையும் இவர் தீவிரமாக நடத்தி வந்தார். சில பிரபலங்களும் இந்த பிரச்சாரத்திற்கு ஆதரவு அளித்து இருந்தனர்.
எதிர்ப்பு
கோவில்களின் சொத்துக்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை, நிதிகள் சரியாக பயன்படுத்தப்படவில்லை என்று ஜக்கி வாசுதேவ் குற்றஞ்சாட்டி வந்தார். அதே சமயம் பொதுமக்கள் தரப்பில் இருந்து சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர், கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்று கூறி வந்தனர்.
அறிவிப்பு
இந்த நிலையில் புதிதாக பதவி ஏற்று இருக்கும் தமிழக அரசு நேற்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி தமிழகத்தில் அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்து கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் வெளிப்படையாக பதிவேற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டார். திருக்கோயில் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளின் உரிமை ஆவணங்களை ஸ்கேன் (Scan) செய்து இணையத்தில் பதிவேற்றுதல் (Uploading).
உத்தரவு
திருக்கோயில் சொத்து ஆக்கிரமிப்புகளை அகற்றல், நியாய வாடகை வசூலித்தல் மற்றும் திருக்கோயில் வருவாயினங்களைப் பெருக்கும் வகையில் விரைந்து செயல்பட வேண்டும், என்று உத்தரவிடப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை சொத்துக்கள் குறித்து வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது. இந்த அறிவிப்பு பெரிய அளவில் வரவேற்புகளை பெற்றது.
வரவேற்பு
இந்த நிலையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையை பாராட்டி ஜக்கி வாசுதேவ் டிவிட் செய்துள்ளார். அவர் செய்துள்ள டிவிட்டில், அறநிலையத்துறைக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டுகள் - சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள வரலாற்று நடவடிக்கை இது. மக்களின் வேண்டுகோளை ஏற்று துரித நடவடிக்கை எடுத்தமைக்கு பாராட்டுகள். வெளிப்படைத் தன்மைதான் நல்லாட்சிக்கான முதல்படி. நல்வாழ்த்துகள், என்று கூறியுள்ளார்.