ஜெய்பீம்.. ஜாதி வெறிக்கு எதிராக வலுவாக வீசப்பட்ட சாட்டை.. கொண்டாடும் ரசிகர்கள்!
சென்னை: நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய்பீம்.
ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்களின் உணர்வுகளை ரத்தமும் சதையுமாக காட்சிப்படுத்தி, அனைவர் கண்களையும் குளமாக்கி உள்ளது ஜெய்பீம்.
தமிழகத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை (jai bhim real story) தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது .

லாவகமாக எடுத்த படம்
திரைப்படத்திற்காக சில சமரசங்களை செய்து கொண்டால் அது உண்மைக்கு மாறாக போய்விடும்.. உண்மை சம்பவத்தை அப்படியே எடுத்தால் அது ஆவணப்படம் போல மாறிவிடும்.. ஆனால் ஜெய்பீம் திரைப்படம் இதை இரண்டு விஷயங்களையும் கவனமாக கையாண்டு உண்மை சம்பவத்தின் வலி மாறாமல், அதே நேரம் திரைப்படத்துக்கு உரித்தான அத்தனை அம்சங்களுடன் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

காட்சி அமைப்புகள்
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வாங்கித் தருவது என்ற ஒற்றை வரி கதை என்ற போதிலும் கூட சஸ்பென்ஸ் திரில்லர் என்ற வகையில் படம் பயணிப்பதால் ரசிகர்களுக்கு நேரம் போவதே தெரியவில்லை என்பது படத்தின் மற்றொரு ப்ளஸ் பாயிண்ட். அனைத்தை விடவும் முக்கியமாக இந்த படத்தின் காட்சி அமைப்புகள் அனைத்து தரப்பு பாராட்டுகளையும் பெற்றுள்ளன.

ஊருக்குள் யார் விடுவா
ஒரு உதாரணம்.. ஊர் பிரசிடெண்ட் வீட்டுக்குள் பாம்பு புகுந்து விடுகிறது. இருளர் ஜாதியை சேர்ந்த இளைஞர் பாம்பை லாவகமாக பிடித்து விட்டு பிரசிடெண்ட் செல்லும் காரை தள்ளி ஸ்டார்ட் செய்யவும் உதவுகிறார். இதற்கு சன்மானமாக பிரசிடெண்ட் பணம் கொடுக்கும்போது, "அம்மா (பிரசிடெண்ட் மனைவி) எங்க ஊர்தாங்க.. உதவிக்காக பணம் வேண்டாம்" என்று அந்த இளைஞர் பெருந்தன்மையாக சொல்கிறார். இவ்வளவு தூரம் உயிரை பணயம் வைத்து உதவி செய்த அவரை, பிரசிடெண்ட் மனைவி கோபித்துக் கொள்கிறார். "ஏன் , விட்டால் எங்கள் சொந்தக்காரன் என்று சொல்லுவ போலயே.. உங்களை எல்லாம் யார் ஊருக்குள் விட்டார்கள்.. எங்கள் ஊர்க்காரர் என்று எப்படி நீ சொல்வாய்.." என்று கோவித்துக் கொள்கிறார் பிரசிடெண்ட் மனைவி,.
Recommended Video

தோலுரித்து காட்டிய ஜெய்பீம்
பாம்பு பிடிக்க பைக்கில் அழைத்து வருபவர் கூட தன்மீது இருளர் ஜாதியை சேர்ந்தவர் கை பட்டு விடக்கூடாது என்று முறைத்து பார்ப்பது, ஜாதி வெறியின் ஆழத்தை மக்கள் மனதில் சாட்டை போல வீசும் காட்சி அமைப்பு. காவல்துறை நடவடிக்கை தொடங்கி.. சமூகத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் ஜாதி என்பது எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.. ஒரு சிலருக்கு சலுகைகளையும் ஒரு சிலருக்கு தீராத வலிகளையும் எப்படி ஏற்படுத்துகிறது என்பதை தோலுரித்துக் காட்டியுள்ளது ஜெய்பீம் திரைப்படம்.

பரியேறும் பெருமாள் வரிசையில்..
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் எப்படி சாதிய வன்மத்தின் வலியை போகிறபோக்கில் காட்டி சென்றதோ அதே போல வலிந்து திணிக்காமல் அதேநேரம் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் அடக்குமுறைகளை அப்படியே காட்டுகிறது ஜெய்பீம் திரைப்படம். எனவேதான், ரசிகர்களை இருக்கையின் நுனியிலேயே அமர்த்தி வைத்து விடுகிறது.

கால் மீது கால் போடும் சிறுமி
பழங்குடியினர் ஜாதியை சேர்ந்த ஒரு சிறுமி, சூர்யா கதாபாத்திரத்தின் எதிரே வந்து நாற்காலியில் அமர்ந்துகொண்டு அவரைப்போலவே செய்தித்தாளை எடுத்து வாசிப்பதும் அவரைப்போலவே கால் மீது கால் போட்டு அமர்ந்தபோது அதை சூர்யா பார்ப்பதும், எனவே சிறுமி தயக்கம் காட்டுவதும், சூர்யா கண்களாலேயே "நீ படிம்மா, கால் மீது கால் போடு.." என்று ஒற்றை ஜாடையில் சொல்வதும் கூஸ் பம்ப் காட்சி. இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. என்னதான், 20 வருடங்களுக்கு முன்பாக நடைபெற்ற கொடுமை பற்றி பேசினாலும், இப்போதுள்ள நமது சமுதாயத்திலும், இதில் பெரிய முன்னேற்றம் ஏதும் வந்துவிடவில்லை. எனவே இந்த படம் இந்த காலத்திலும் பொருந்திப் போவதாகவும் மனசாட்சியை உலுக்குவதாகவும் இருப்பது இதன் வெகு சிறப்பு.












Click it and Unblock the Notifications