கொளுத்தும் வெயில்! குறுக்கு வழியில் +2 மாணவர்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ்! ஸ்டாலினிடம் சென்ற "பேராசிரியர்"
சென்னை: கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் அதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள்.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் இருக்கும் என்றும் இதனால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்தாலும் வெயில் 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவித்த போதிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாணவர்களும் ஆசிரியர்களும் கல்வி கடுமையிலிருந்து விடுபட்டு ஓய்வு பெறுவதற்காகவும்,கடும் வெப்பத்திலிருந்து மாணவர்களைக் காப்பதற்காகவும் கோடை விடுமுறைஅளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது பரவலாக 105 க்கும் மேல் வெப்பநிலை இருந்து வருகிறது. முதியவர்களும் பொதுமக்களும் நோயாளிகளும் இந்த வெப்ப அலையை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் சில தனியார்ப் பள்ளிகள் கோடை விடுமுறைக் காலங்களில் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்த இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. சீருடை இல்லாமல் மாற்று உடையில் மாணவர்களை அழைத்து தனியாகச் சிறப்பு வகுப்புகளை நடத்துவதாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பெற்றோர்கள் புகார் அளித்த வண்ணம் இருக்கிறார்கள். இதுமாணவர்களின் மீது உளவியல் சார்ந்த மன அழுத்தத்தை உருவாக்கும்.
கூடுதல் மதிப்பெண்களைப் பெறுவதற்காகக் குறுக்கு வழியில் தனியார் பள்ளிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை ஒருகாலும் அனுமதிக்க முடியாது.எனவே பள்ளிக்கல்வித்துறை உடனடியாக இது விடயத்தில் தலையிட்டுச் சிறப்பு வகுப்புகள் நடத்தாமல் தமிழக மாணவர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications