நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு கூடுதல் முயற்சி செய்யணும்! ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
சென்னை: நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு கூடுதல் முயற்சியை துரிதமாக செய்ய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video
நீட் தேர்வால் உயிரிழந்த அரியலூர் மாணவி நிஷாந்தினிக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், இது போன்ற செயலை வேறு எந்த மாணவர்களும் செய்ய வேண்டாம் என உருக்கமுடன் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

அரியலூர் மாணவி
அரியலூர் நகரில் இரயில் நிலையம் அருகே வசிக்கும் நடராஜன் - உமா தம்பதியினரின் மகள் மாணவி நிஷாந்தினி. இவர் கடந்த ஆண்டு நடந்த +2 தேர்வில் 529.5 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். கடந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்த நிலையில், இந்த ஆண்டும் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்தார்.

மாணவி நிஷாந்தினி
வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்கள் நீட் தேர்வுக்கு கடினமாக இருப்பதாகவும், தமது தந்தை இனி வெளிநாட்டில் கஷ்டப்படாமல் ஊரிலேயே வந்து தங்கி இருக்க வேண்டுமென்றும் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. மருத்துவக் கனவு தகர்ந்து போனதால் தனது உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி நிஷாந்தினி அவர்களின் மறைவு பெரும் துயரத்தை தருகிறது.

மத்திய அரசு பிடிவாதம்
அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற செயலை வேறு எந்த மாணவர்களும் எடுக்க வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எத்தனைப் பேர் செத்தாலும் நீட் எனும் அரக்கனை தொடர்வோம் என பிடிவாதம் பிடிக்கிறது ஒன்றிய அரசு.

கூடுதல் முயற்சி
மாநில அரசும் நீட் தேர்வு ரத்து செய்வதற்கு இன்னும் கூடுதல் முயற்சியை துரிதமாக செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜவாஹிருல்லா தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications