"மோடி, அமித்ஷா அழுத்தத்துக்கு பணிந்து மக்கள் தீர்ப்பை ஆளுநர் மாற்ற நினைப்பது தவறு" - ஜோதிமணி
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ள நிலையில், அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ளது. இந்த சூழலில், தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பை மாற்ற முயற்சிக்கக் கூடாது என்றும், மோடி - அமித்ஷா அழுத்தத்திற்கு பணிந்து செயல்படுவது மிகப்பெரிய தவறு என்றும் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது எக்ஸ் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் ஆட்சியமைக்க 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், ஆட்சியை அமைக்க மேலும் 11 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகியுள்ளது.

இந்த சூழலில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தனது 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவை தவெகவுக்கு வழங்குவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் தவெக அணியின் பலம் மேலும் அதிகரித்துள்ளது.
அதேநேரத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் ஆதரவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த மூன்று கட்சிகளுக்கும் தலா 2 உறுப்பினர்கள் உள்ளதால், அவர்களின் முடிவு தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இதற்காக தவெக சார்பில் அந்த கட்சிகளிடம் அதிகாரப்பூர்வமாக ஆதரவு கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் இதுவரை அழைக்காமல் உள்ளார். இதற்கு திமக, அதிமுக, சிபிஎம் என பல்வேறு கட்சியினரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில், தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பை மாற்ற முயற்சிக்கக் கூடாது என்றும், மோடி - அமித்ஷா அழுத்தத்திற்கு பணிந்து செயல்படுவது மிகப்பெரிய தவறு என்றும் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது எக்ஸ் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து எம்பி ஜோதிமணி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: ஆளுநர் அதிகாரத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது என்றால்_ 108 இடங்களில் வெற்றிபெற்றுள்ள தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க அழைக்காமல் ஒரு இடத்தில் வெற்றிபெற்றுள்ள பாஜகவை, மாண்புமிகு ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்க முடியுமா?
திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு வரம்பற்ற அதிகாரம் எதுவும் கிடையாது. அவர் அரசியல் சாசனத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர் என்று உச்சநீதிமன்றம் பலமுறை தெளிவாகக் கூறியுள்ளது.
த.வெ.க வின் தலைவர் திரு.விஜய் அவர்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருக்கிறார். அவர் கூட்டணி என்று கடிதம் கொடுத்தாலும் , த.வெ.க தனிப்பெரும் கட்சி தான். தனிப்பெரும் கட்சியின் தலைவரை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆட்சி அமைக்க அழைப்பது தான் சரியானது. ஆட்சி அமைத்த பிறகு பெரும்பான்மையை சட்டமன்றத்தில் தான் நிரூபிக்க முடியும். ஆதரவுக் கடிதம் தர வேண்டிய அவசியம் இல்லை.
மோடி, அமித்ஷா அழுத்தத்திற்குப் பணிந்து தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பை மாற்றி எழுத நினைப்பது மாபெரும் தவறு. இதை தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் ஏற்கமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications