சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக ஜூலை 21ல் பதவியேற்கிறார் எம்.எம்.ஸ்ரீவஸ்தவா! ஆளுநர் மாளிகையில் விழா!
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜூலை 21 ஆம் தேதி திங்கட்கிழமை பதவியேற்கிறார் மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா. தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவஸ்தவாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேசமயம் ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வரும் ஜூலை 21 ஆம் தேதி திங்கட்கிழமை பதவியேற்கிறார் மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா. தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவத்சவாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் மாலை 4 மணிக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
யார் இந்த எம்.எம். ஸ்ரீவஸ்தவா?
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, கடந்த1964 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் பிறந்தவர். இவர் பிலாஸ்பூரில் பள்ளிப் படிப்பையும், சி.எம்.டி. கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தையும், கே.ஆர். சட்டக் கல்லூரியில் தங்கப் பதக்கத்துடன் எல்.எல்.பி. பட்டத்தையும் பெற்றார்.
மேலும் பிலாஸ்பூரில் உள்ள குரு காசிதாஸ் பல்கலைக்கழகத்தின் படிப்பு வாரியம் மற்றும் கல்வி கவுன்சிலின் உறுப்பினராக இருந்தார் .ஜபல்பூர் பார் கவுன்சிலில் 1987ஆம் ஆண்டு சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து ராய்கர் மாவட்ட நீதிமன்றம், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் மற்றும் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் பயிற்சி பெற்றார்.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
அதோடு வருமான வரித் துறை, ராய்ப்பூர் நகராட்சி மன்றம் மற்றும் சத்தீஸ்கர் மாநில மின்சார அமைப்புகள், நிறுவனங்கள் போன்றவற்றுக்கான நிலை ஆலோசகராக பணியாற்றியுள்ளார். இதனையடுத்து 2005ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு, 2009 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார். அதன் பின்னர் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய அவர் அங்குள்ள நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் இருந்தார். பின்னர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications